சென்னை, அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல். இதுதொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- துணை வேந்தர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 14 முதன்மை அரசு பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிரந்தர துணை வேந்தர்கள் நியமிக்கப்படாத சூழல் நிலவுவது மிகுந்த கவலையளிக்கிறது. உயர்கல்வி துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் இந்த சூழலில், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, காலியிடங்களை நிரப்புவது குறித்த தெளிவான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். தற்காலிக அமைப்பு தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பொறுப்பு பதிவாளர்கள் மூலமாகவும், தற்காலிக கன்வீனர் கமிட்டிகள் மூலமாகவும் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கன்வீனர் கமிட்டி என்பது ஒரு தற்காலிக அமைப்பாகும்; அதை கொண்டு கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளையோ, புதிய ஆராய்ச்சி திட்டங்களையோ அல்லது நிதி ஒதுக்கீடுகளையோ முழுமையாக மேற்கொள்ள முடியாது. நிர்வாக செயல்பாடு துணை வேந்தர்கள் இல்லாததால் புதிய பாடத்திட்ட அறிமுகம், பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் கல்வி தொலைநோக்கு திட்டங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும், சிண்டிகேட் கூட்டங்கள் முறையாக கூடாததால் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாகின்றன. பொறுப்பு பதிவாளர்கள் தங்களது வழக்கமான பணிகளுடன் கூடுதல் பொறுப்புகளை கவனிப்பதால் அன்றாட நிர்வாக செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் தலையாய கடமை பல்கலைக்கழகங்களின் சுயாட்சியையும், தமிழ்நாட்டின் உயர்கல்வி தரத்தையும் பாதுகாப்பது மாநில அரசின் தலையாய கடமையாகும். சட்ட மற்றும் நிர்வாக ரீதியான தடைகளைத் தாண்டி, வெளிப்படைத்தன்மையுடன் தகுதியான கல்வியாளர்களை தேர்வு செய்ய தேவையான தேடுதல் குழுக்களை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எனவே, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்திலேயே உயர்கல்வித் துறை அமைச்சர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் 14 பல்கலைக்கழகங்களுக்கும் நிரந்தர துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fill-vice-chancellor-posts-in-state-universities-immediately-sdpi




