சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் 1,671.39 கிலோமீட்டர் நீளத்திலான மழைநீர் வடிகால்களிலும், 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் 11,790 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மின்சாரத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால்கள் கட்டுதல், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல், கால்வாய்களில் தூர்வாருதல் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரி மேம்படுத்துதல், அபாயகரமான மரக்கிளைகளை கத்தரித்தல், அனைத்து மோட்டார் பம்புகள், வாகனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார்நிலையில் வைத்திருத்தல், சுரங்கப்பாதை பராமரிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், அண்ணாநகர் மண்டலம், வார்டு-102க்குட்பட்ட 3-வது அவென்யூவில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை இன்று (20.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோல, மாநகராட்சியின் வடக்கு வட்டாரம், மத்திய வட்டாரம், தெற்கு வட்டாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை இணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், மண்டல அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். மாநகராட்சிப் பகுதியில் சுமார் 1,671.39 கிலோமீட்டர் நீளத்திலான மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் (Silt Catch Pit) மழைநீர் சீராகச் செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,08,041 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 11,790 டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர சாலைகள் முழுவதும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடையற்ற நீர் ஓட்டத்தை உறுதி செய்வது, மழைநீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள 430 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்கள் மற்றும் 18,000 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் திடக்கழிவுகள் முழுமையாக அகற்றுதல், 815 சிறுபாலங்கள் மற்றும் 16 பெரிய பாலங்கள் உள்ளிட்ட குறுக்கு வடிகால் அமைப்புகளை முழுமையாக சுத்தம் செய்தல், தாழ்வான போக்குவரத்துப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கைத் தடுக்க 7 வாகனச் சுரங்கப்பாதைகள் மற்றும் 12 பாதசாரி சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட அனைத்து சுரங்கப்பாதைகளிலும் உள்ள நீர் சேகரிப்பு கிணறுகள் மற்றும் நீரேற்று அமைப்புகளை சுத்தம் செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 30.09.2026 முன்னதாகவே முடிக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-11790-tonnes-weeds-water-hyacinths-removed




