சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள். ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்கள்! சேலம் மாவட்டம், ஜருகுமலையில் அமைந்துள்ள மேலூர், கீழூர் ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெருவிளக்கு, அத்தியாவசியப் பொருள்கள், விவசாய விளைபொருள்களின் விற்பனை என அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் போராடி வருகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு கிலோமீட்டர் நடை மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி மிகவும் குறைவாக உள்ளது. ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து தண்ணீரை வீட்டுக்குக் கொண்டு வர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தலையில் சுமந்தே வர வேண்டியிருக்கிறது. கிராமத்தில் ஒரு பொதுக் கிணறும் உள்ளது. அங்கும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் மோட்டார் வசதி இல்லாததால் அந்தக் கிணறு பயன்பாட்டில் இல்லை. இதனால், தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடந்து சென்று குடிநீரை எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் கிடைப்பதால், அந்த நேரத்திலேயே சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது" என்றனர். எரியாத தெருவிளக்குகள். இரவில் அச்சத்தில் மக்கள்! இது குறித்து ராஜாமணி கூறுகையில், "கிராமத்தில் தெருவிளக்குகள் பல இடங்களில் செயல்படாமல் உள்ளன. பழுதடைந்த தெருவிளக்குகள் நீண்ட நாள்களாகச் சரிசெய்யப்படாததால், இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடனும் சிரமத்துடனும் நடமாட வேண்டிய நிலை உள்ளது" என்றார். மருத்துவமனை இல்லை. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 10 கி.மீ பயணம்! மகேஷ்வரி கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையமோ, மருத்துவமனையோ இல்லை. குழந்தைகளுக்கோ,பெரியவர்களுக்கோ உடல்நலக் குறைவு ஏற்பட்டால், இந்த மலைக் கிராமத்தை விட்டு அடிவாரப் பகுதிக்கோ அல்லது சேலம் நகருக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்காக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அங்கு சென்ற பிறகே மருத்துவச் சிகிச்சை பெற முடிகிறது. அவசர காலங்களில் மருத்துவ உதவி கிடைக்காதது எங்களுக்கு மிகப்பெரிய சிரமமாக உள்ளது" என்றார். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க. மலையை விட்டு இறங்க வேண்டிய கட்டாயம்! பொதுமக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே உள்ளது. அதிலும் எட்டாம் வகுப்பு வரைதான் கல்வி வசதி உள்ளது. அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால், மலைக் கிராமத்திலிருந்து கீழே இறங்கி அடிவாரப் பகுதிக்கோ அல்லது சேலம் நகருக்கோதான் செல்ல வேண்டும். ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் சென்று வருவது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால், பல மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடர முடியாமல், எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பையே இடைநிறுத்தும் சூழல் நிலவுகிறது" என்றனர். அரளிப்பூ விவசாயம். சந்தையை அடைவதே சவால்! பொதுமக்கள் மேலும் கூறுகையில், "எங்கள் கிராம மக்களின் முதன்மைத் தொழில் விவசாயம். அதிலும் பெரும்பாலானோர் அரளிப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விளைவித்த அரளிப்பூக்களை விற்பனை செய்வதற்காக சேலம் நகருக்குத்தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்வதில் விவசாயிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். மேலும், இந்த மலைக் கிராமங்களில் அன்றாடத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குக்கூட கடைகள் இல்லை. அடிவாரப் பகுதிக்கோ அல்லது சேலம் நகருக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், அன்றாட வாழ்க்கையிலேயே மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்" என்றனர். அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் 400 குடும்பங்கள் மேலூர் மற்றும் கீழூர் ஆகிய இரு மலைக் கிராமங்களிலும் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெருவிளக்கு, அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/melur-keezhur-villagers-demand-basic-amenities-from-drinking-water-to-healthcare



