சென்னை, சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திடீர் நெஞ்சுவலி நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில், முதல்-அமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு காவல்துறையின் இசைக்குழுவினர் தேசபக்தி மற்றும் பாரம்பரிய இசையை வாசித்துக் கொண்டிருந்தனர். இந்த இசைக்குழுவில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி மையத்தின் வாத்திய இசை காவலர் தர்மராஜ் (வயது 53) பங்கேற்று வாத்தியம் வாசித்து வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியை தாங்க முடியாமல் அவர் மயங்கிய நிலையிலேயே சுருண்டு விழுந்தார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் அவரை உடனடியாகத் தூக்கிக்கொண்டு அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் தர்மராஜுக்கு சி.பி.ஆர். எனப்படும் இதயம் மீட்புச் சிகிச்சையை உடனடியாக வழங்கினர். பின்னர் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த காவலர் தர்மராஜுக்கு ராணிமங்கலவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், முடி வைத்தானேந்தல் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்திலும், அவரது குடும்பத்தினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-officer-who-fainted-at-independence-day-celebration-passes-away




