சென்னை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பாக துறை சார்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கம் குறித்து களப்பணி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இன்று (20.08.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்துப் பேசினார். இக்கூட்டமானது, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கண்டறிதல், அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், மீண்டும் பள்ளியில் சேர்த்தல் மற்றும் தொடர்ந்து கல்வி பயில்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (GPL), கல்வித் துறை, சமுதாய வளர்ச்சிப் பிரிவு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு குழந்தையையும் மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதும், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும். "எந்தவொரு குழந்தையும் பின்தங்கிவிடக்கூடாது" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் களஆய்வில் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களின் குடும்பங்களுடன் தொடர்புகொள்ளுதல், ஆலோசனை வழங்குதல், பள்ளிகளுடன் ஒருங்கிணைத்தல், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு உதவுதல் மற்றும் முறையான தொடர் நடவடிக்கைகளை உறுதி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள். தெளிவான செயல்படுத்தும் இலக்காக, கண்டறியப்பட்ட பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை 31 ஆகஸ்ட் 2026-க்குள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முறையான குடும்பத் தொடர்பு, ஆலோசனை மற்றும் பள்ளி அளவிலான உதவிகள் மூலம் இந்த இலக்கை அடைய சம்பந்தப்பட்ட துறைகளும் களப்பணிக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படும். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பேசும்போது, “பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் கையாள்வதன் முக்கியத்துவத்துடன், கண்டறியப்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். வெறும் கண்டறிதலோடு நின்றுவிடாமல், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளுதல், அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடுதல், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு வழிவகுத்தல் மற்றும் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதையும் கல்வி பயில்வதையும் உறுதி செய்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மொத்தம் 7,302 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டறிந்ததன் அடிப்படையில், கள அளவில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான செயல்முறைக்கு உதவவும், NULM-ஐச் சேர்ந்த 96 சமூக ஒருங்கிணைப்பாளர்களுக்கு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம் முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெ.வசந்தி மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் (GPL) குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ், சமுதாய வளர்ச்சி பிரிவு-தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர், NULM-ன் உதவித் திட்ட அலுவலர்கள், சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் NULM தலைமைச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/consultative-meeting-on-re-enrolling-out-of-school-children-held-in-chennai




