சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து – தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய ராகுல்காந்தியை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா? 2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா? தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/congresss-protest-against-the-neet-exam-is-a-political-farce-ttv-dhinakaran




