சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் வீடுகளுக்கான மின் நுகர்வைக் கணக்கெடுப்பதில் ஏற்படும் குளறுபடிகளாலும், அலட்சியப் போக்கினாலும் பொதுமக்கள் கடுமையான மின் கட்டண சுமைக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இக்குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தவெக அரசின் முதற்கடமையாகும். அந்த வகையில், மின் விநியோக இழப்பைக் குறைத்து, மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்ய ரூ.3,03,758 கோடி மதிப்பீட்டில் RDSS திட்டத்தை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 3 கோடி நுகர்வோர் ஸ்மார்ட் மீட்டர்கள், 4,72,500 விநியோக மின்மாற்றி மீட்டர்கள் (DT Meters), 18,274 மின்பாதை மீட்டர்கள் (Feeder Meters) ஆகியவற்றைப் பொருத்தும் பணிகளுக்காக ரூ.19,235.36 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது. மத்திய அரசு 3 கோடி நுகர்வோர் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்த ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும், தமிழகத்தில் சென்னை தி.நகர் பகுதியில் வெறும் 1.28 லட்சம் மீட்டர்கள் மட்டுமே இதுவரை பொருத்தப்பட்டிருப்பது ஏன்? இத்திட்டத்தின் மூலம் தமிழக மக்கள் பயனடைவதைத் தவெக அரசு தடுப்பது ஏன்? மத்திய அரசின் நிதியுதவியுடன், ஆள்தேவையின்றி மின்நுகர்வைத் துல்லியமாகக் கணக்கிடும் இந்த ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டமே மின் கட்டண குளறுபடிகளுக்குச் சிறந்த தீர்வாகும். எனவே, மக்கள் நலன் காக்கும் வகையில் இந்த 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தைத் தாமதப்படுத்தாமல், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/implement-smart-meter-plan-to-end-electricity-billing-issues-nainar-nagendran




