விருதுநகர், அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. என்பது பல துரோகங்களை கடந்து வந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க பேரியக்கம். அன்றைக்கு தன்னுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சென்றவர், அடுத்த நாள் கருணாநிதியுடன் கைகோர்த்து பேட்டி கொடுத்த துரோகத்தை எம்.ஜி.ஆர் சந்தித்தார். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, மக்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியை பிடித்தார். அ.தி.மு.க. தொடங்கி 53 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்றும் இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த கட்சியாகவே திகழ்கிறது. விஜய் ஒரு நடிகர் என்ற காரணத்திற்காக கொஞ்சம் கூடுதலாக வாக்குகள் அவருக்கு சென்றுள்ளன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மாற்று அலை வீசுவதாக கூறுவது முற்றிலும் தவறு. அப்படி ஒரு அலை இருந்திருந்தால், 1977-ல் எம்.ஜி.ஆர். பெற்றதை போல மிகப்பெரிய மெஜாரிட்டி வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி பெறவில்லை. த.வெ.க. ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினைகள்? தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தவர் விஜய். த.வெ.க. ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது; நிலைக்காது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டும்தான் தமிழ்நாட்டில் பலமான கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள். அதிலும் கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட ஒரே பேரியக்கம் என்பது அ.தி.மு.க. மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சியை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aiadmk-dmk-are-the-movements-with-the-strongest-structure-rajendra-balajis-speech




