தீராத கடன் தொல்லையால் வாடும் அன்பர்களின் பிரச்னைகள் நீங்க அருள்பாலிக்கும் திருத்தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. அதுதான் பாகலூர் கணபதி ஆலயம். இவரை கடன் தீர்க்கும் கணபதி என்றே அழைக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாகலூர் (ஓசூரிலிருந்து பேருந்து வசதி உண்டு). இங்கே அழகுற கோயில்கொண்டிருக்கிறார் அருள்மிகு வரசித்தி விநாயகர். திருக்கோயிலில், ஈசான்ய மூலையைப் பார்த்த படி ஆவுடையாரின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் இவர். பாகலூர் ஸ்ரீவரசித்தி விநாயகர் இவருக்கு வலப்புறத்தில் அன்னை சொர்ணாம்பிகையும், இடப்புறத்தில் பழநி முருகனும் காட்சி தருகின்றனர். ஆவுடையார் மீது அருளும் இந்த விநாயகரை வழிபடுவதால், சிவனாரை வழிபட்ட பலன் இந்த விநாயகரைத் தரிசித்தால் கிடைக்குமாம். வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள்பாலிக்கிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தைக் காட்டி அருள்கிறார். பிராகாரத்தில் தண்டாயுதபாணியும் திருச்செந்தூர் முருகனும் உள்ளனர். ஐயப்பன் 18 படிகளுக்கு மேல் அமர்ந்துள்ளார். பிராகாரத்தின் முடிவில் நவகிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியானமண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இதற்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள். விநாயகரை நோக்கி நாம் பக்தியோடு படியேறிவந்து தரிசனம் செய்தால் நம் வாழ்வின் தரமும் படிப்படியாக உயருமாம். பாகலூர் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் கடன் தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்தப் பிள்ளையாருக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். அதாவது, சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் கடன் பிரச்னைகள் நீங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் கொண்டு 12 அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும். பின்னர், அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தியில் ஒரு விளக்கைக் குறைத்து 11 விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இப்படியே, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்காகக் குறைத்து வந்து, கடைசி வழிபாட்டு நாளன்று ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வழிபடவேண்டும். இப்படி விளக்குகள் குறையக் குறைய கடன் சுமைகளும் படிப்படியாகக் குறையும்; பிரார்த்தனை நிறைவடையும் நாளில் கடன் பிரச்னைகளும் முழுமையாக நீங்கிவிடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. பின்னர், அடுத்து வரும் திங்கள் அன்று விரதமிருந்து விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றவேண்டும் என்கிறார்கள். மேலும், குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், விநாயகர் சதுர்த்தித் திருநாளில் இந்தப் பிள்ளையாருக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபடுகிறார்கள். இதன் மூலம், விரைவில் குழந்தைப் பேறு வாய்க்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள். விநாயகர் சதுர்த்தி இங்கு ஆண்டுதோறும் சித்திரை மூல நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தீபாவளி, மார்கழி பள்ளியெழுச்சி, தை பொங்கல், தை அமாவாசை. அம்மனுக்கு பவுர்ணமி பூஜை, நவராத்திரி பூஜை, முருகனுக்கு மாதகார்த்திகை, சஷ்டி, தைப்பூச பூஜை போன்ற வைபவங்களும் களைகட்டுகின்றன. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை பாகலூர் வரஸித்தி விநாயகரைத் தரிசனம் செய்து வாருங்கள். வாழ்க்கை கடன் சுமைகள் நீங்கி மகிழ்ச்சியாக மாறும். திண்டுக்கல் மாவட்டம் கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில்: பணிமாற்றம் அருளும் தென்னகத்து கோகுலம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/spiritual/temples/krishnagiri-bagalur-varasiddhhi-vinayagar-temple




