சென்னை டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தி கோவை சாம்பியன் பட்டம் வென்றது. 8 அணிகள் இடையிலான 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதன் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நடந்தன. இறுதி கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தன. லீக் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி திருச்சிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்று மழையால் ரத்தானதால் புள்ளி பட்டியல் முன்னிலை அடிப்படையில் மதுரை அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று, மழையால் கைவிடப்பட்டதால் கோவை அணி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. 2-வது தகுதி சுற்றில் கோவை அணி 84 ரன் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. முன்னாள் சாம்பியனான மதுரை அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2 முறை சாம்பியனான கோவை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 3-வது இடம் பெற்றது. இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6-ல் கோவையும். 5-ல் மதுரையும் வென்றுள்ளன. இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் அனிருத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. 183 ரன்கள் இலக்கு இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ராதாகிருஷ்ணன் 13 ரன்னிலும், லோகேஸ்வர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் பாலசுப்பிரமணியனுடன் கேப்டன் சித்தார்த் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பாலசுப்பிரமணியன் (39) ஆட்டமிழக்க, மறுமுனையில் சித்தார்த் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை அணி தரப்பில் சரவணன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோவை சாம்பியன் 183 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி மதுரை அணி பேட்டிங் செய்தது. இதில், சதுர்வேத் (40), ஹரி ராகவேந்திரா (24), அனிருத் (24 ஆட்டமிழக்கவில்லை) ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், ஒற்றை இலக்கத்திலும் ஆட்டமிழந்தனர். இதனால், 14.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மதுரை அணி 98 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 84 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோவை அணிக்கு ரூ.20 லட்சமும், 2-வது இடம் பெற்ற மதுரை அணிக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-final-kovai-beat-madurai-to-win-title




