சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதீப்ராஜ், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் திருவொற்றியூர் போலீஸார் பிரதீப்ராஜை விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பிரதீப்ராஜ், தன்னுடைய குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே கந்துவட்டி பிரச்னை, விநாயகர் சிலை வைப்பதில் பிரச்னை இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் இன்ஸ்பெக்டர் மீதும் ரௌடி ஒருவர் மீதும் சரமாரியாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில்தான் வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பிரதீப்ராஜை ஒரு கும்பல் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. கொலை நடந்த தகவல் கிடைத்ததும் பிரதீப்ராஜின் அம்மா ராணி, அவரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் சீருடையைப் பிடித்து இழுத்த பிரதீப்ராஜின் அம்மா ராணி, இவர்தான் என்னுடைய மகனைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதோடு திருச்செந்தூர் கடற்கரையில் கரைத்துவிடுவேன் என்று ஆவேசமாகக் கூறினார். அதனால் அவரை அங்கிருந்த போலீஸார் அப்புறப்படுத்தியதோடு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரதீப்ராஜ் இதையடுத்து திருவொற்றியூர் போலீஸார், கொலை வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பிரதீப்ராஜின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரதீப்ராஜ் கொலைக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி நவநீதம் என்பவரின் மகன் நவீன்குமார், அவரின் நண்பர்கள் ஹரி, ஜாபர், லோகேஷ் ஆகியோரைக் கைது செய்தனர். இந்தக் கொலை குறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், ``பிரதீப்ராஜின் அம்மா ராணி, நவநீதம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்ததாக தகவல் உள்ளது. அதுதொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது. இதுதவிர நவநீதம், அந்தப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையின் அருகே ஆண்டுந்தோறும் விநாயகர் சிலையை பிரதீப்ராஜ் ஏற்பாட்டில் இந்து அமைப்புகள் வைப்பதுண்டு. விநாயகர் சிலையால் நவநீதம் நடத்தும் டிபன் கடையில் வியாபாரம் பாதித்தது. இதுவும் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இரண்டு குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சமரச பேச்சுவார்ததை நடத்தினோம். அதன்பிறகுதான் பிரதீப்ராஜ், தன்னுடைய உயிருக்கு ஆபத்து எனக் கூறி பேட்டி அளித்திருந்தார். இந்தச் சூழலில்தான் அவரை நவநீதம் என்பவரின் மகன் நவீன்குமார் உள்பட 4 பேர் கொலை செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்" என்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகு பிரதீப்ராஜ், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்ட ஒரு ரௌடியின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அதோடு காவல்துறையிலிருக்கும் சிலர் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். அதன்பிறகுதான் பிரதீப்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில், நவீன்குமார் உள்பட 4 பேரைக் கைது செய்திருக்கிறோம். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் போலீஸார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால் அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். பிரதீப் ராஜ் கொலை: ``காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" - டிடிவி தினகரன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/actor-pradeep-raj-murdered-and-4-youths-are-arrested-in-chennai




