புதுடெல்லி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும், கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதனிடையே, ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்களில் 8 பேர் காணிக்கை, நன்கொடை பணத்தை திருடியுள்ளனர். மேலும், அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்குகளுக்கு செலுத்தியும், உறவினர்களுக்கு கொடுத்தும் உள்ளனர். திருடிய பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு குறித்து உத்தர பிரதேச அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் 3 கோடி ரூபாய் வரை காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்படவர்களின் வீடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டில் தொடர்புடைய 8 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(நேற்று) அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேட்டை கண்டித்து எதிர்க்கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்க்கட்சி எம்.பி. பப்பு யாதவ், காவி உடையும், நெற்றியில் திலகமும் அணிந்து வந்திருந்தார். அவர் கையில் ஒரு உண்டியல் இருந்தது. அதில் ராமர் படம் ஒட்டப்பட்டிருந்தது. அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களைப் போல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அந்த உண்டியலில் ரூபாய் நோட்டுகளைப் போட்டனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் அந்த உண்டியலில் பணத்தை போட்டார். உடனே பப்பு யாதவ், அந்த உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து தனது பைக்குள் வைத்துக் கொண்டார். அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேட்டை குறிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இவ்வாறு நூதன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சனாதன கலாசாரத்தை கேலி செய்துவிட்டார்கள் என்று கூறி பா.ஜ.க. எம்.பி. பன்சுரி சுவராஜ் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சேர்ந்து டெல்லியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவர்கள் தங்களது மனுவில், ‘எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்தியது போராட்டம் அல்ல, அது சனாதன தர்மத்தை கேலி செய்யும் செயல், துறவிகளை அவமதிக்கும் செயல், இஎதியாவின் கலாசாரத்தை அவமானப்படுத்தும் செயல். இது இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/unconventional-protest-over-ayodhya-donation-irregularities-they-mocked-sanatana-bjp-mp-files-police-complaint




