`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்.' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும். கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு. கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது? “மான் வேட்டையா. மனிதர்கள் வேட்டையா?” கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே! தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன். தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். விஜய் பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை. ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.' எனக் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/seeman-condemns-dk-sivakumar-over-killing-of-3-tamils




