சென்னை, மண்ணுக்கும் மக்களுக்கும் பேச வேண்டிய பேரவையில், மல்லுக்கட்டும் மோதல்கள் ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சட்டப்பேரவை சட்டம் ஒழுங்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆட்சியின் பொறுப்பு என்ன? என்ற அடிப்படைக் கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறதா? பெண்கள் அச்சமின்றி நடமாடும் சூழல் இருக்கிறதா? குற்றங்களைத் தடுக்க காவல்துறை போதிய அளவில் செயல்படுகிறதா? இத்தகைய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களும் செயல்பாடுகளும் வெளிப்பட வேண்டிய இடமே சட்டப்பேரவைதான். அரசியல் எதிர்ப்பை மண்ணையும் மக்களையும் காப்பதற்கான செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டிய அவையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் மோதலில் ஈடுபடுவதால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? சட்டப்பேரவை என்பது வெறும் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்தும் மேடை அல்ல. ஆட்சியின் செயல்பாடுகளைப் பரிசீலிப்பதும், தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், தீர்வுகளை உருவாக்குவதும்தான் சட்டப்பேரவையின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிக்குக் கேள்வி எழுப்பும் உரிமை உண்டு. அதே நேரத்தில், மக்களின் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பொறுப்புடன் விளக்கம் அளிப்பது ஆட்சியாளர்களின் கடமை. வார்த்தை மோதல்கள் இரு தரப்பும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டைத் தாண்டி மக்களின் நலனை முன்னிறுத்த வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள். வார்த்தை மோதல்கள் மக்களின் அச்சத்தைப் போக்காது. அரசியல் சச்சரவுகள் குற்றங்களைத் தடுக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல், தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு குடும்பத்தின் பாதுகாப்பைக்கூட உறுதி செய்யாது. மக்களுக்குத் தேவைப்படுவது அரசியல் வெற்றி தோல்விகள் அல்ல. அவர்கள் வாழும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதற்கான உறுதி. அரசின் பொறுப்பு சட்டம் ஒழுங்குடன் முடிவடைவதில்லை. இந்த மண்ணில் வாழும் மக்களின் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் நிலம், நீர், காற்று, காடு, கடல் மற்றும் மலை வளம் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, பிற மாநிலங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை அடிப்பதிலிருந்து பாதுகாப்பதும் ஆட்சியின் வரலாற்றுப் பொறுப்பு. வளர்ச்சி என்ற பெயரில் நிலம் பறிக்கப்படும்போது, நீர்நிலைகள் அழிக்கப்படும்போது, கடற்கரை மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும்போது, அதன் துயரங்களை மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். நாளை பிறக்கப்போகும் தலைமுறைகளும் அந்தத் துயரங்களை அனுபவிக்க வேண்டுமா? என்கிற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். வாழும் பூமியின் இயற்கைச் செல்வம், அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பானதாக விட்டுச் செல்லப்பட வேண்டும். இதுவே ஓர் ஆட்சியின் உண்மையான அளவுகோல். வலியுறுத்தல் ஆகவே, அரசியல் மோதல்களைத் தாண்டி மண்ணையும் மக்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதே ஆட்சியின் முதன்மைக் கடமை என்பதை உணர்ந்து, அதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில், பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, சட்டப்பேரவையின் மாண்பையும் சனநாயக நெறிகளையும் காத்து, மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-are-there-aggressive-confrontations-in-the-assembly-a-forum-meant-to-speak-for-the-land-and-its-people-velmurugan-asks



