சேலம், சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார். கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கி உள்ள நிலையில், இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் இதற்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-first




