இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக பவுர்ணமி பூஜை உள்ளது. தெய்வீக ஆற்றல் நிறைந்த இந்த நாளில் செய்யும் வழிபாடுகளுக்கு அதிக பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது. அமாவாசை எப்படி முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறதோ, அதேபோல் முழு நிலவு தினமான பவுர்ணமி தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். அதிலும் ஆடி மாத பவுர்ணமி வழிபாடு, அற்புதமான பலன்களை தரக்கூடிய சிறப்புக்குரிய நாள் ஆகும். அவ்வகையில் இந்த ஆண்டு ஆடிப் பவுர்ணமி, நாளை (29.7.2026) வருகிறது. ஆடிப் பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகளை பெறலாம். ஆடிப் பவுர்ணமி என்பது அம்மன் வழிபாட்டிற்கு மட்டுமின்றி, சிவன் வழிபாடு, குலதெய்வ வழிபாட்டிற்கும் உகந்தது. பவுர்ணமி கிரிவலம் ஆடிப் பவுர்ணமியில் குல தெய்வத்திற்கு சிறப்பு வழிபாடு செய்வதையும், குல தெய்வத்தை வீட்டிற்கு அழைத்து படையல் இட்டு வழிபடுவதையும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் சிவனின் பரிபூரண அருளையும் பெறலாம். சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயசம் படைத்து வழிபாடு செய்தால் எதிரி பகை மறையும் என்பது ஐதீகம். பொதுவாக பவுர்ணமியில் கிரிவலம் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடிப் பவுர்ணமியில் கிரிவலம் வருவது மனதிற்கு அமைதியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். ஆடிப் பவுர்ணமி, உத்திராட நட்சத்திரத்துடன் கூடி வரும் நாள் என்பதால் திருமாலை வழிபாடு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். அன்றைய தினம் விளக்கேற்றி வழிபட உயர் பதவி கைகூடும், குடும்ப முன்னேற்றம் ஏற்படும், புண்ணியம் வந்துசேரும். முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானையும் வழிபடலாம். ஆடிப் பவுர்ணமி விரதம் ஆடி மாத பவுர்ணமி நாளில், விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அம்மன் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, விளக்கேற்ற வேண்டும். அன்றைய தினம் தண்ணீர், பால், பழம் கூட அருந்தாமல் விரதம் மேற்கொள்வது சிறந்தது. அம்மனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம் படைக்கலாம். வீட்டில் பூஜையை முடித்துவிட்டு, அருகில் இருக்கும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, புடவை சாற்றி, நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறந்தது. இந்த விரதத்தை மேற்கொண்டால் திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். தொழிலில் வியாபார முன்னேற்றம் ஏற்படும், தீராத நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/aadi-pournami-rituals-and-wonderful-benefits




