கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ (PSNA) பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுற்றுலாவுக்காக கேரளா வந்த நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பனம்பிக்குன்னு சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் வேகமாகச்சென்று மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. பயங்கர சத்தத்துடன் கார் மோதியதை அடுத்து அப்பகுதியினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காரின் பாகங்களை வெட்டி எடுத்தே மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணியளவில் உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் லாரியின் பின்புறம் மோதிய கார் விபத்தில் மாணவர்களின் உடல்கள் உருக்குலைந்ததால் அனைவரையும் அடையாளம் காணமுடியவில்லை. இதுவரை 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், சேலத்தைச் சேர்ந்த விஸ்வா (20), திண்டுக்கல் சூர்யா (20), யுவசஞ்சித் (20), மதுரை சந்தோஷ் (20), பிரசன்னா ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுடன் பயணித்த மற்ற 3 மாணவர்களின் விவரங்கள் இன்னும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையில் விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், "பெரும் சத்தம் கேட்டு நாங்கள் ஓடிவந்தோம். மாணவர்களின் முகங்களைக்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துபோயிருந்தது. மோதிய வேகத்தில் மாணவர் ஒருவர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு லாரியின் மேல் விழுந்தார். பொதுமக்களும், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடியே உடல்களை மீட்கப்பட்டன" என்றனர். திருச்சூர் விபத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் கூறுகையில், "கண்களால் பார்க்கவே முடியாத கோரமான காட்சியாக இருந்தது. மாணவர்களின் உடல் உறுப்புகள் நொறுங்கிய காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தன. ஒருவர் இருக்கைக்கு அடியில் சிக்கியிருக்க, காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது" எனத் தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய எச்சரிக்கைப் பலகைகள் இல்லாததும், தேசிய நெடுஞ்சாலையின் முதல் பாதையிலேயே (Track 1) லாரி நிறுத்தப்பட்டிருந்ததும் விபத்துக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, நடிகர் கொல்லம் சுதி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கு வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே இந்த விபத்தும் நடந்துள்ளது. கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/accidents/8-dindigul-college-students-die-in-thrissur-accident



