டிஜிட்டல் உலகம் காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது. மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச் செல்கின்றன. அந்த மாயை உலகம்தான் 'டிஜிட்டல் உலகம்'. ஒரு காலத்தில், காலை வேளை காபிவாசனையுடனும், குடும்ப உரையாடல்களுடனும் தொடங்கியது. இன்று, அது ஸ்கிரீன் ஒளியுடனும், அமைதியான ஸ்குரோலிங்குடனும் ஆரம்பமாகிறது. அருகில் இருப்பவர்களை விட அதாவது குடும்பத்தினரை விட, திரைக்கு பின்னால் உள்ளவர்களுடன்தான் நம்முடைய தொடர்பு அதிகமாகிறது. இது ஒரு மாற்றம் மட்டுமல்ல, வாழ்வியல் மாற்றம். ஆனால், இந்த மாற்றத்தை முழுவதும் எதிர்மறையாக பார்க்க முடியாது. உலகளாவிய சந்தை ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மாணவன், டிஜிட்டல் யுகம் மூலம் உலகின் சிறந்த ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறான். குறைந்த முதலீட்டில் தொடங்கிய தொழில், இணையத்தின் மூலம் உலகளாவிய சந்தையை அடைகிறது. தகவல் எல்லைகள் முறிந்து, வாய்ப்புகள் எல்லோருக்கும் திறக்கப்பட்டுள்ளன. இதுவே டிஜிட்டல் புரட்சியின் வலிமை. ஆனால், இதன் மறுபக்கம் அமைதியாக நம்மை அபகரித்துக்கொண்டிருக்கிறது. நேரத்தை சேமிக்க வந்த தொழில்நுட்பம், இப்போது அதே நேரத்தை நம்மிடமிருந்து பறித்து வருகிறது. “ஒரு வீடியோ மட்டும்" என்று சமூக வலைத்தளங்களை பார்க்க தொடங்கும் பழக்கம், கண் இமைக்கும் நேரத்தில் மணி நேரங்களாக மாறுகிறது. “ஆன்லைன்” உலகில் இணைந்திருக்கும்போது. “ஆப்லைன்” வாழ்க்கை மெதுவாக நம்மை விட்டு விலகிச் செல்கிறது. அதிலும் முக்கியமான கேள்வி, நாம் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறோமா? அல்லது அது நம்மை அமைதியாக கட்டுப்படுத்துகிறதா? வரமா? சாபமா? திரையின் ஒளி நம்மை முன்னேற்றத்துக்கு வழி நடத்தும் சக்தி கொண்டது. ஆனால் அதே ஒளி, நம்மை நம்முடைய உண்மையான வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிவைக்கும் ஆற்றலும் கொண்டது. இதற்கான தீர்வு தொழில்நுட்பத்தில் இருந்து தப்பிப்பது அல்ல. அதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே. ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் திரையை சார்ந்து வாழ்வதற்குப் பதிலாக, சில நிமிடங்கள் நிஜ உலகத்தை நோக்கி திரும்பிப் பார்ப்போம். ஒரு உரையாடல், ஒரு நடை, ஒரு அமைதியான தருணம் இவை தான் நம்மை மீண்டும் நம்மோடு இணைக்கும். அந்த சமநிலையில்தான், நம்முடைய உண்மையான வாழ்க்கை இன்னும் காத்திருக்கிறது. டிஜிட்டல் உலகம் வரமா? சாபமா? என்பதை முடிவு செய்வது நம் செயல்பாடுகளில்தான் இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/a-man-lost-in-the-light-of-the-screen-is-the-digital-world-a-blessing-is-it-a-curse




