மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. இவர் மாநிலம் முழுவதும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பல உணவகங்களின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. துகாராம் முண்டேயின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மீது அந்தந்த மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக அளவில் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் துகாராம் முண்டே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். துக்காராம் முண்டே மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட 'விமல் பான் மசாலா' தயாரிப்பை மறைமுகமாக விளம்பரப்படுத்துவதாகக் கூறி, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மும்பை மண்டலப் பிரிவு கடந்த மாதம் 11ம் தேதி நடிகர்கள் அஜய் தேவ்கன், டைக ஷெராப் மற்றும் ஷாருக் கானுக்கு நோட்டீஸ் வழங்கி இருந்தது. இதற்குப் பதிலளிக்க அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நடவடிக்கைகள் குறித்து துகாராம் முண்டே அளித்துள்ள பேட்டியில்,''உங்களைப் பொறுத்தவரை அவர்கள் நட்சத்திரங்களாக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் அவர்கள் வெறும் விளம்பரதாரர்கள் மட்டுமே. எனவே, சட்டத்தை மீறியவர்களாகவே நான் அவர்களைப் பார்க்கிறேன். சட்டம் தன் கடமையைச் செய்யும். அதனால்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளோம். நாங்கள் சட்டப்படி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட மூன்று நடிகர்களில் இருவர் நோட்டீஸ்களுக்குப் பதிலளித்துள்ளனர். ஒருவர் பதிலளிக்கவில்லை. எனினும் பதிலளிக்காத அந்த ஒருவரின் விஷயத்தில், நாங்கள் சட்டரீதியான வழக்குத் தொடரும் நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம். பதிலளித்த அந்த இருவருமோ, இதற்கான பொறுப்பு உற்பத்தியாளரையே சாரும் என்று தெரிவித்துள்ளனர். நாங்கள் அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். நோட்டீஸ்களை வழங்கிய எனது அதிகாரியான உதவி ஆணையரே இந்த விசாரணையை மேற்கொள்வார்." என்றார். எந்தெந்த நடிகர்கள் பதிலளித்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, "எனக்குத் துல்லியமாக நினைவில்லை. ஏனெனில் அந்த விவரம் உதவி ஆணையரிடம் உள்ளது" என்று கூறினார். ஷாருக் கானின் தரப்பிலிருந்து பதில் வந்ததா என்று கேட்டதற்கு, ``பெரும்பாலும் அவர் பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அது குறித்து எனக்கு முழுமையாக உறுதியாகத் தெரியவில்லை. தயாரிப்பாளர் ஒரு பொருளைத் தயாரிக்கும்போது, அதை விளம்பரப்படுத்துபவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விளம்பரம் தொடர்பான விதிமுறைகள் தெளிவாக உள்ளன. விளம்பரதாரர் யார் என்பது குறித்து அந்த விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. மேலும், விளம்பரம் செய்யும் நபர் அல்லது நிறுவனத்தின் மீது மிகத் தெளிவான பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தாங்கள் பரிந்துரைக்கும் அல்லது ஆதரிக்கும் விஷயம் குறித்து உரிய கவனத்துடன் செயல்பட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இந்தப் பொறுப்பு அவர்களுக்கு இல்லை என்று கூறுவது தவறானது. இது தார்மீக ரீதியானது மட்டுமல்ல, சட்டரீதியானதும் கூட. ஏனெனில், ஒரு ஒழுங்குமுறை அதிகாரியாகவே நான் இதைக் கூறுகிறேன்." என்று தெரிவித்தார். கடந்த 14ம் தேதி விமல் ஏலச்சி பான் மசாலாவை தயாரிக்கும் பிபி அக்ரோ எல்எல்பி, மூன்று நடிகர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பையில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலகம் அந்த நோட்டீஸ்களை அனுப்பியதால் அதனை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்று நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா தீர்ப்பளித்தார். இந்த வழக்கை விசாரிப்பதற்கு மகாராஷ்டிர நீதிமன்றங்களே மிகவும் பொருத்தமானவை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/they-may-be-stars-to-you-but-they-are-law-breakers-says-thukaram




