சென்னை, அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக சட்டசபை செயலகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். அ.தி.மு.க.வில் பிளவு தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் செயல்படத் தொடங்கினர். தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க.கட்சிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். 25 எம்.எல்.ஏ.க்கள் அரசை அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரின் முடிவுக்கு மாறாக 25 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவளித்தனர். தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோரும் அவர்களில் இடம் பெற்றிருந்தனர். எடப்பாடி பழனிசாமி புகார் இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க. கட்சியில் இணைந்துவிட்டனர். அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்தார். ஆனால் அவர்கள் 4 பேரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்களின் தொகுதிகள் காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், அவர்கள் 4 பேர் மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சபாநாயகர் மன்னிப்பு இந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட திருப்பமாக, அவர்கள் 4 பேர் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டனர். அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்களுக்கு சபாநாயகர் மன்னிப்பு அளித்து உத்தரவிட்டார். ஆனால் மன்னிப்பைப் பெற்றிருந்த டாக்டர் சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் மற்றொரு நாளில் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துகொண்டனர். மீண்டும் தொடருகிறேன் இந்த நிலையில் மற்றொரு திருப்பமாக, இசக்கி சுப்பையா கடந்த ஆகஸ்டு 28-ந்தேதியன்று சட்டசபை செயலாளர் சாந்தியிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில், தான் ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாகவும், அந்த கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும்,எம்.எல்.ஏ.வாக தொடர விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். இன்று பதில் கடிதம்? காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இடைத்தேர்தல்தான் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், இசக்கி சுப்பையாவின் கடிதத்திற்கு சட்டசபை செயலகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது. இன்று அந்தக் கடிதம் அவருக்கு அனுப்பப்படலாம் என்று சட்டசபை செயலக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/isakki-subbiahs-letter-withdrawing-his-resignation-will-the-assembly-secretariat-send-a-reply-today




