சென்னை, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது. சொத்துகள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் முந்தைய திமுக அரசால் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதியன்று அவர்களின் பெயரிலும், அவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில் தனித்தனி படிவத்தில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் நாள் நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அனைவரும் இந்த விதியை மதித்து சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும். அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல. கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின் ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்குவது குறையும்; இதன் மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடையக்கூடும். ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறைகள் அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்று விடக்கூடாது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக மலிந்து கிடக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும். லோக் அயுக்தா அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதன்மையானது லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது ஆகும். எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் மாநில முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்களோ, அந்த மாநிலங்களில் எல்லாம் அரசு நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் கூட, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள்ளும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டு வரப்படவில்லை, சொத்துக்கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் கொண்டு வரப்படவில்லை என்றால் ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும். ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் ஊழல் செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும். வலியுறுத்தல் அதற்கான முதல் நடவடிக்கையாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கைகளை கட்டாயமாக்கி விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-and-mlas-must-also-disclose-their-asset-details-anbumani



