சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானம் வரவேற்பிற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- முதன்மை இடம் கிடைக்கவில்லை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து எப்போதும் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஒருமனதாக இத்தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரவேற்பிற்குரியது. தமிழ்நாட்டின் கவர்னர் மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை பாடும் நடைமுறையை கொண்டு வந்தார். அண்மையில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டலை பின்பற்றாமல், கவர்னர் ஆர்.வி.அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது. தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை. தீர்மானத்தை வரவேற்கிறோம் “வந்தேமாதரம்” பாடலில் சில வரிகள் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை மதச்சார்பு கொண்டதாகவும், சில வரிகள் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானதாகவும் இருப்பதால், குறிப்பிட்ட அந்தப் பாடல் வரிகளை தேசிய கீதமாக ஏற்கக் கூடாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், கவர்னர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்“ பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது, வழக்கத்தில் இருந்து வரும் மரபை மீறிய செயலாகும். இவ்வாறு கவர்னரின் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடரும் நிலையில், தமிழ்நாட்டின் மரபுரிமையை, பண்பாட்டை பாதுகாக்க அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதன்மைப்படுத்த, வழக்கத்தில் இருந்து வரும் மரபுரிமையை நிலை நாட்ட எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. வலுவான அழுத்தம் தர வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிடும் மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் தமிழ்நாடு அரசு வலுவான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-resolution-that-the-tamil-thai-vazhthu-must-be-sung-first-is-welcome-m-veerapandian




