கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானைக் கூட்டம் நேற்றிரவு 11.45 மணியளவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை என இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. காட்டு யானைகள் உயிரிழப்பு ரயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி உடல்கள் நசுங்கிய நிலையில், காட்டு யானைகளின் உடல்கள் இருப்பது குறித்த தகவல் அறிந்த வாளையாறு வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ரயிலில் சிக்கி இருந்த யானைகளின் உடல்களை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக தமிழ்நாடு–கேரளம் இடையே இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டன. அதிகாலை 4 மணிக்கு தாய் மற்றும் குட்டி யானையின் உடல்கள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்கப்பட்டன. இதையடுத்து ரயில் என்ஜின் சரி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, ரயில் போக்குவரத்து சீரானது. காட்டு யானைகள் உயிரிழப்பு விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே தமிழக எல்லை அமைந்துள்ளது. தமிழ்நாடு வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களில் ரூ. 16 கோடி செலவில் ஏ.ஐ கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளை கேரள வனத்துறை மேற்கொள்ளாததால், ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. உலக யானைகள் தினமான நேற்று தாய் மற்றும் குட்டி யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாலக்காடு வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 5 மாணவர்கள் கைதான பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/environment/two-wild-elephants-killed-after-being-hit-by-a-train-near-coimbatore



