Vollständiger Artikel
தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி மலைக்கோயில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த தலம் அமைந்துள்ளது. இத்தலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலை சாம்பல் நிற அணில்களின் வாழ்விடமாகவும் உள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் –மேகமலை புலிகள் காப்பகப் பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகிலுள்ள இந்த மலைக்கு மாதந்தோறும், அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷம் ஆகிய விசேச நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். கரடு முரடான மலைப்பாதை வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இக்கோயில். வத்திராயிருப்பு, தாணிப்பாறை சென்று அங்கிருந்து மலை ஏற வேண்டும். அத்துடன், மதுரை மாவட்டம் சாப்டூர் அருகேயுள்ள வாழைத்தோப்பு பாதை மற்றும் தேனி மாவட்டம், வருசநாடு பகுதி வழியாகவும் இந்த மலையை அடையலாம். இவ்வாறு மூன்று மலைப்பாதைகளில் செல்லலாம். தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து 6 கி.மீ தூரத்திலும், சாப்டூர் வாழைத்தோப்பு பாதையில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், வருசநாடு மலைப்பாதையில் இருந்து 14 கி.மீ தூரத்திலும் செல்ல முடியும். ஆனால், பெரும்பாலான பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரம் வழியாகவே மலை ஏறுகின்றனர். இந்தப் பாதையே பக்தர்களின் முக்கிய பயன்பாட்டுப் பாதையாக உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மலைக்குச் சென்ற 9 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்விற்குப் பிறகு மாதத்தின் எல்லா நாட்களிலும் சதுரகிரி மலையேற விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்தது. மலைப்பாதை பின்னர், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மாதத்தில் அமாவாசை, பெளர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய 3 தினங்கள் மட்டும் மலையேற அனுமதி அளித்தது. சுமார் 3 முதல் 5 மணி நேரம் பாறைகளில் மேடு, பள்ளங்களைக் கடந்து செல்கின்றனர். இந்த மலைப்பாதையில் பல இடங்களில் ஆறு, ஓடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரத்தினால் அதனைக் கடந்து செல்ல முடியாமல் பாதியிலேயே சிக்கிக் கொள்கின்றனர். பல ஆண்டுகளாக நிலவி வரும் இந்த பிரச்னைக்கு வனத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை. இதற்கிடையே கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவான ராமசாமி, சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கையின் போது, ”தாணிப்பறை மலையடிவாரத்தில் இருந்து சதுரகிரி கோயில் வரை ரோப்கார் சேவை அமைக்க வேண்டும்” என, வலியுறுத்திப் பேசினார். மலைப்பாதையில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இதனை கருத்தில் கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய சென்னை மெட்ரோ ரயில் பொது மேலாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வங்கி திட்டப் பொறியாளர் சந்திரசேகரன், வன உயிரினக்காப்பாளர் அசோக்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நெல்லிக்குண்டம், தவசிப்பாறை உள்ளிட்ட சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து மலையேறிச் செல்லும் பக்தர்களிடம் பேசினோம், ”தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ நாட்களை முன்னிட்டு பக்தர்கள் வருகை தருகிறார்கள். கையில் ஒரு குச்சியை மட்டும் வைத்துக் கொண்டு கரடு- முரடான மலைப்பாதையில் ஏறிச் செல்கிறோம். மலை செங்குத்தாக உள்லதால் மலை ஏறிச் செல்லசெல்ல சில இடங்களில் வழுக்குப்பாதையும் உள்ளதால் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் உட்பட தமிழகத்தில் 22 இடங்களில் ரோப்கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று வரை மேல்நடவடிக்கை எதுவுமில்லை. மலைப்பாதை இந்த ரோப்கார் சேவையால் மலைப்பாதை வழியே நடந்து செல்லும் பக்தர்கள் மழைக்காலங்களில் மலையில் சிக்கினாலும் எளிதாக மீட்க முடியும். இந்த ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தாணிப்பாறையில் இருந்து 15 நிமிடத்தில் சதுரகிரிமலையை சென்றடைய முடியும். செல்லும் வழியில் மலையின் இயற்கை அழகு, வன விலங்குகள் நடமாட்டம், சிற்றோடைகள், நீரூற்றுகள், சிற்றருவிகள் ஆகியவற்றை ரசித்தபடி செல்லலாம். குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ரோப்கார் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆட்சியிலாவது சதுரகிரியில் ரோப்கார் சேவை தொடங்கப்பட வேண்டும்.” என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




