சென்னை, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், இன்று (05.08.2026) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது:- சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்காணித்து தொடர்ந்து, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வண்டல் சேகரிப்பு தொட்டிகளிலும் வண்டல்கள் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவரை 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் 92,657 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் வண்டல்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதர வண்டல் சேகரிப்புத் தொட்டிகளிலும் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மழைநீர் வடிகால்வாய் இணைப்பு இல்லாத இடங்களில் இணைப்பினை ஏற்படுத்திட வேண்டும். மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 32 குளங்கள் மற்றும் ஏரிகளின் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில் உள்ள 28,584 மரங்களின் கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம், கேப்டன் காட்டன் கால்வாய், டிரஸ்ட்புரம் கால்வாய், ரெட்டிக் குப்பம் கால்வாய், பள்ளிக்கரணை கால்வாய், செக்ரடரியேட் காலனி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் வண்டல்கள் தூர்வாருதல், தாங்குச் சுவர், வேலி அமைத்தல் மற்றும் தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும், பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு குதிரைத் திறன்கள் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள், மின்சார மோட்டார் பம்புகளை செயல்படும் வகையில் தயார்நிலையில் வைத்திடவும், கூடுதலாக தேவைப்படும் மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைத்திடவும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், முகத்துவாரங்களில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும். மாநகராட்சியின் சார்பில் 215 நிவாரண மையங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் வைத்திருக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்பதற்காக மாநகராட்சியின் 36 படகுகள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் படகுகளை தயார்நிலையில் வைத்திடவும், மழைநீர் சேமிப்புத் தொட்டி மற்றும் மோட்டார் அறைகளை தயார்நிலையில் வைத்திடவும் அனைத்து இயந்திரங்கள் மற்றும் மோட்டார்களின் பயன்பாட்டினை சோதனை மேற்கொண்டு தயார்ப்படுத்திடவும் வேண்டும். அனைத்து அலுவலர்களும் சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், இணை ஆணையாளர்கள் ஸ்ரேயா பி. சிங் (சுகாதாரம்), க. கற்பகம் (கல்வி), செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், வட்டார துணை ஆணையாளர்கள் எச். ஆர். கௌஷிக் (மத்தியம்), ஸ்வேதா சுமன் (வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mayor-orders-speedy-completion-of-stormwater-drains




