சென்னை, கோயம்பேடு, பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சங்கர் (53). இவர், கோயம்பேடு, 100அடி சாலையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். 31.07.2026-ம் தேதி மாலை, கோயம்பேடு மார்க்கெட் செல்ல சங்கர், தன்னுடைய பைக்கில் சென்றார். அவர், கோயம்பேடு, 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் அவரை வழிமறித்தார். பின்னர் சங்கரிடம், தன்னை போக்குவரத்து போலீஸ் எனக் கூறிய அந்த நபர், பைக்கின் சாவியை முதலில் எடுத்திருக்கிறார். பின்னர் பைக்கின் ஆவணங்கள், லைசென்ஸ் உள்ளிட்டவற்றை சங்கரிடம் அந்த நபர் கேட்டிருக்கிறார். ஆனால் சங்கரிடம் சில ஆவணங்கள் இல்லை. அதனால் என்ன செய்வது எனத் தெரியமல் சங்கர் நிற்க, நீ மது அருந்தியிருக்கியா என அந்த நபர், அடுத்த கேள்வியை கேட்டிருக்கிறார். இதனால் சங்கர், போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டோம் என கருதி அமைதியாக நின்று கொண்டிருந்தார். பைக் இதையடுத்து சங்கரின் பைக்கை பறிமுதல் செய்வதாகக் கூறியவர், சங்கரையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு கோயம்பேடு காவல் நிலையத்துக்கு செல்வதாக கூறியிருக்கிறார். நடுவழியில் சங்கரை கீழே இறக்கி விட்ட அந்த நபர், காவல் நிலையத்துக்கு வந்து ஆவணங்களை காட்டிவிட்டு பைக்கை எடுத்துவிட்டு செல் எனக் கூறி விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சங்கர், கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த போலீஸார், நாங்கள் யாரும் உங்களின் பைக்கை பறிமுதல் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சங்கர், கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கரிடம் போலீஸ் எனக் கூறி பைக்கை பறிமுதல் செய்த நபர், ஆவடி கொள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) எனத் தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த சங்கரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமேஷ், கோயம்பேடு பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் டோக்கன் போடும் வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர் போலீஸ் எனக் கூறி வேறு ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/fake-police-arrested-in-chennai-3




