மதுரை, மாயமான பிளஸ்-1 மாணவன் கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டான். மாணவியுடன் பழகியதால் கடத்திச்சென்று கொலையா? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிளஸ்-1 மாணவர் மதுரை ஆனையூர் அருகே உள்ள வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி யோகலட்சுமி. இவர்களுடைய மகன் தமிழ்ச்செல்வன் (வயது 16). இவன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றான். நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில், அவரது நண்பர்கள் வீட்டில் என பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதைதொடர்ந்து, கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் யோகலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். கண்மாயில் பிணமாக மீட்பு இந்தநிலையில், கூடல்நகர் பகுதியில் அப்துல்கலாம் நகரில் உள்ள கண்மாய் தண்ணீரில் மாணவன் தமிழ்ச்செல்வன் பிணமாக மிதந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவனின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறும்போது, நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச்சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம். வீட்டுக்கு தெரிந்தால் சிக்கிக்கொள்வோம் என கருதி அவருடன் சென்ற நண்பர்கள் இதை மறைத்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. மேலும், மாணவனை யாராவது கடத்தி கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிேறாம் என போலீசார் தெரிவித்தனர். கடத்திக்கொலை? பின்னர் மாணவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு திரண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழ்ச் செல்வன் வேறொரு சமூகத்தை சேர்ந்த மாணவியை காதலிப்பதாக கூறி பழகியதாக தெரிகிறது. அந்த மாணவியின் தந்தை தமிழ்ச்செல்வனை கண்டித்து மிரட்டி உள்ளார். ஒருமுறை நண்பர்களுடன் சென்றபோது, அவர் தமிழ்ச்செல்வன் கையை பிடித்து திருகி தாக்கியுள்ளார். அந்த நபர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது மகளுடன் பழகிய ஆத்திரத்தில் தமிழ்ச்செல்வனை கடத்திக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம், அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளோம். மேலும், சம்பவத்தன்று தமிழ்ச்செல்வனுடன் இருந்த நண்பர்களையும் விசாரிக்க வேண்டும். போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என்றால், உடலை வாங்கமாட்டோம். பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்" என்றனர். மாணவியுடன் பழகியதால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்திருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை இந்நிலையில் மதுரை ஆனையூர் கழிவுநீர் குட்டையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவனது பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சிறுவனின் வயிற்றில் வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்தாகவும், மார்பில் கடித்ததற்கான அடையாளம் மற்றும் சிறுவனின் கைகள், முட்டியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/incident-of-boy-recovered-dead-shocking-details-in-post-mortem-report




