கேரள மாநிலத்தில் `ஆப்ரேஷன் தூஃபான்' என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி போலீஸார் கடந்த ஜூன் 26-ம் தேதி தொட்டப்பன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 7 சாக்கு மூட்டைகள் அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு தொடர்பாக சான்றுப் பொருள்கள் என்ற வகையில் சுல்தான் பத்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி புகையிலைகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் அனைத்தும் சுல்தான் பத்தேரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள பொருள்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே, கடந்த ஜூலை 19-ம் தேதி இரவு சுல்தான் பத்தேரி காவல் நிலையத்தின் ஏட்டு டி.சபித் என்பவர் நிலைய பொது நாட்குறிப்பு (ஜி.டி) பொறுப்பில் பணியில் இருந்தார். அப்போது காவல் நிலைய எழுத்தரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சாவியை, அவருக்குத் தெரியாமல் நைசாக எடுத்த அவர், அதிகாலை நேரத்தில் பாதுகாப்பு அறையைத் திறந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்களைத் திருடி, பின்னர் அவற்றை தனது சொந்த காரில் ஏற்றிச் சென்றுள்ளார். புகையிலை மூட்டைகள் இந்நிலையில், இம்மாதம் (செப்டம்பர்) 10-ம் தேதி பாதுகாப்பு அறையில் இருந்த புகையிலைப் பொருள்கள் திருடுபோனது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனடியாக தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் பணியில் இருந்த காவலர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் நிலையத்தின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், ஏட்டு சபித் அதிகாலையில் பாதுகாப்பு அறையைத் திறந்து தனது காரில் சான்றுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. திருட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் இருந்த ஏட்டு சபித், இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். அவரது செல்போன் சிக்னல் கடைசியாக அம்பலவயல் பகுதியில் காட்டிய நிலையில், தற்போது செல்போன் சுவிட் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு சபித் ஏட்டு சபித்தின் வீட்டிற்கு போலீஸார் சென்று தேடியும் அவர் சிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய டி.எஸ்.பி எம்.எம்.அப்துல் கரீம் மாவட்டக் காவல்துறைக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட ஏட்டு டி.சபித்தை சஸ்பெண்ட் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.தேவமனோகர் உத்தரவிட்டார். திருடப்பட்ட புகையிலைப் பொருள்களை அவர் எங்கு பதுக்கி வைத்துள்ளார், அதை விற்பனை செய்யத் திட்டமிட்டாரா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இந்தச் செயலைச் செய்தாரா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது அவர் பிடிபட்ட பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஏட்டை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/police-constable-got-suspended-after-seized-items-theft-at-station



