சென்னை, விஜய் பிரசாரம் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், பெற்றோரையும், குடும்பத்தில் உள்ள மூத்தவர்களையும் தனக்கு ஓட்டு போட சொல்லும்படி குழந்தைகளிடம் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் செய்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வாசுகி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தால், அதை தடுக்க பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எதிராக தேர்தல் வழக்கும் தொடரலாம். குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது பணப்பட்டுவாடா போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க, தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கின்றன. தேர்தலின்போது, வேட்பாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் செலவுகள் கண்காணிப்படுகிறது. பறக்கும்படை அதிகாரிகள் மூலம் அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட 599 கோடியே 24 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குழந்தைகளை பொறுத்தவரை, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் அவர்களை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில், 'தேர்தல் பிரசாரம் அல்லது வேறு எந்த ஒரு தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளிலும், குழந்தைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடாது" என்று கூறியுள்ளது. பொதுவாக வாக்காளர்கள் அனைவரும் வயது வந்த நபர்கள்தான். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல ரகசியமாகத்தான் அவர்கள் வாக்களிக்கின்றனர். அதனால், மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறுவதற்கு எந்த ஒரு அனுமானமும் இல்லை. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் அதேநேரம், சமூக ஊடக பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலத்தில், வாக்காளர்கள் அல்லாத குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும் வீட்டில் உள்ள பெரியவர்களையும் தான் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க சம்மதிக்க வைக்கும் நோக்கில் நடத்தப்படும் குழந்தைகளின் பிரசாரங்களை அனுமதிப்பது குறித்த உகந்த தன்மை ஆராயப்படும். தேவைப்பட்டால், சூழ்நிலைக்கேற்ப பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/study-on-the-use-of-children-for-campaigning-election-commissions-reply-in-the-high-court




