மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியை சேர்ந்தவர் ஹரேராம் சிங்(வயது 35). இவரது மனைவி சுனிதா தேவி(வயது 30). கடந்த 19-ந்தேதி ஹரேராம் சிங்கிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டதாக அவரது மனைவி சுனிதா தேவி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஹரேராம் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹரேராம் சிங்கின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஹரேராம் சிங் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனிடையே போலீசாருக்கு சுனிதா தேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தனது கணவரை கொலை செய்ததை சுனிதா தேவி ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று, ஹரேராம் சிங் தனது மனைவிக்கு சேலை வாங்கித் தருவதாக கூறிவிட்டு, பின்னர் சேலை வாங்காமல் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுனிதா தேவி, குக்கர் மூடியால் ஹரேராம் சிங்கின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த ஹரேராம் சிங் மீது சுனிதா தேவி ஏறி அமர்ந்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து தனது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாக உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் சுனிதா தேவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/woman-strangles-husband-to-death-for-not-buying-her-a-saree-shocking-incident-in-maharashtra




