சென்னை, நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் ஆர். மாதவன் மாணவர்களின் உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கல்வி அமைப்பின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், மாணவர்களின் குரலுக்கு ஆதரவு நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, கல்விக்கு நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றல் உண்டு; எனவே, நியாயமான, வெளிப்படையான மற்றும் தகுதியின் அடிப்படையில் அமைந்த ஒரு கல்வி முறைக்கு ஒவ்வொரு மாணவரும் தகுதியானவர்கள். இந்திய இளைஞர்களின் அளப்பரிய ஆற்றலை எப்போதும் நம்பி வரும் ஒருவனாக, இன்று பல மாணவர்களும் பெற்றோர்களும் உணரும் கவலையையும் ஏமாற்றத்தையும் நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு கல்வி முறை என்பது நம்பிக்கை, நேர்மை மற்றும் வாய்ப்புகளை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் அந்த நம்பிக்கையைச் சிதைப்பதுடன், எண்ணற்ற இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நம்பிக்கைகள், கடின உழைப்பு மற்றும் கனவுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடும்; குறிப்பாக, மக்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கல்வி மிக முக்கியப் பங்காற்றும் இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் இது மிகவும் முக்கியமானது. இதற்குக் காரணமானவர்கள் எவராயினும், அவர்கள் மீது விரைவாகவும் உறுதியாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன். தண்டனைகள் எவ்வளவு உறுதியாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இனி யாரும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கத் துணியவே கூடாது. இச்சம்பவம் தொடர்பாக கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நமது அரசாங்கம் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து, கல்வி முறையை வலுப்படுத்தி, வருங்கால சந்ததியினருக்காகக் கல்வியின் மாண்பைக் காக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்று கவலையோ அல்லது மனச்சோர்வோ அடைந்திருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் சொல்வது இதுதான்: தயவுசெய்து நம்பிக்கையை இழக்காதீர்கள். எந்தவொரு அமைப்பின் குறைபாடுகளையும் விட உங்கள் திறமை, விடாமுயற்சி மற்றும் நற்பண்புகள் மிகச் சிறந்தவை. தொடர்ந்து கடினமாக உழையுங்கள், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்; தற்காலிகத் தடைகள் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். அர்த்தமுள்ள சீர்திருத்தங்களுக்காக அமைதியான முறையில் கோரிக்கை விடுவோரின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் நான் பாராட்டுகிறேன். அதே வேளையில், உங்கள் போராட்டத்தைக் கைப்பற்றி அதன் உண்மையான நோக்கத்திலிருந்து திசைதிருப்ப முயலக்கூடிய சுயநல சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கருத்துக்களை அமைதியாகவும் பொறுப்புடனும் வெளிப்படுத்துவதற்கான உரிமையை நான் மதிக்கிறேன். இளைஞர்களுடன் உறுதியாக நிற்பதும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை ஆதரிப்பதும், நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்க எனது குரலைப் பயன்படுத்துவதுமே எனது வழிமுறையாகும். நாட்டிற்குச் சேவை செய்யும் பொறுப்பில் உள்ளவர்களின் நல்வாழ்வு மற்றும் ஞானத்திற்காக நான் எப்போதும் மரியாதை செலுத்தி, ஆதரவளித்து, பிரார்த்தனை செய்து வருகிறேன்; ஏனெனில், நாம் அனைவரும் இணைந்து இந்தியாவிற்கு வலிமையான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஹிந்த். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/steps-must-be-taken-to-safeguard-the-credibility-of-the-education-system-actor-madhavan




