திருப்பத்தூர், திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒன்று உள்ளது. செம்மர வழக்குகளில் பிடிபடும் செம்மரக்கட்டைகளும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில், பல்வேறு செம்மர வழக்குகளில் பிடிபட்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். செம்மரக்கட்டைகள் திருட்டு இந்த செம்மரக்கட்டைகள் கடந்த 18-ந் தேதி (நேற்று முன்தினம்) திருடு போனது. இதுகுறித்த தகவல் நேற்று கிடைத்தவுடன் திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் நா.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம். மகேந்திரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் வனச்சரகங்களில் செம்மர வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் செம்மரக் கட்டைகள், திருப்பத்தூர் சந்தன மரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. கடந்த 18-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்து 55 செம்மரக் கட்டைகளை திருடி சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட இருப்பு சரிபார்ப்பின்போது இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதுகாப்பு அதிகரிப்பு திருடப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கிடங்கின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணை நிறைவடைந்ததும் விரிவான அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருப்பத்தூர் சந்தன மரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக் கட்டைகள் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/redwood-logs-worth-rs-50-stolen-from-tirupattur-sandalwood-warehouse




