கேரள மாநிலம் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் செலுத்தியதாக வருமான வரித்துறை சோதனையின்போது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவர் ஆன நிலையில், அவரது வீடு, மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸின் வீடுகள், அலுவலகங்கள் எனப் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கியக் கோப்புகள், கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வீணாவின் கைப்பட எழுதப்பட்ட குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள டி.ஜி.பி ரவாடா சந்திரசேகருக்கு அமலாக்கத்துறை ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. 25 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பி.சுரேஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்நிறுவனத்திடமிருந்து பினராயி விஜயன் தனது மகள் வீணா மூலமாக ரூ.3.28 கோடி லஞ்சப் பணத்தைப் பெற்றதாகவும், இதற்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.என்.சசிதரன் கர்த்தா உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், முகமது ரியாஸும் லஞ்சப் பணத்தைப் பெற்று, அதனை வீணா மற்றும் நண்பர்கள் மூலம் ‘எம்பவர் இந்தியா கேப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் வழியாக துபாய்க்கு மாற்றியதாகவும், இவர்களுக்கு ஷைஜல் முகமது, பி.நிகில், ஹசன் வாரிஸ், வி.பி. பைஜாஸ், எம். நந்துலால் ஆகியோர் உதவியாளர்களாகச் செயல்பட்டுள்ளனர் என்றும் அமலாக்கத்துறை அந்தக் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளது. பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், மருமகன் முஹம்மது ரியாஸ் இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்களாகப் பதவி வகித்தவர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான முகாந்திரங்கள் வெளிவந்துள்ளதால், பினராயி விஜயன், அவரது மகள் வீணா, வீணாவின் கணவர் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை மாநில காவல்துறையை வலியுறுத்தியுள்ளது. இக்கடிதம் தொடர்பாக விளக்கம் அளித்த கேரள சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ரவாடா சந்திரசேகர், "அமலாக்கத்துறையின் கடிதம் கிடைக்கப்பெற்றது. அது உடனடியாக உள்துறைச் செயலாளரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விவகாரங்களில் தெளிவு பெற வேண்டியுள்ளது. அந்த அம்சங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, மாநில அரசுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். இதில் வேறு எந்தச் சட்டச் சிக்கல்களும் இல்லை" என்று தெரிவித்தார். பினராயி விஜயன் அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, "சி.எம்.ஆர்.எல் நிறுவனம், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு நிதிப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை வழங்கியுள்ள அறிக்கையை நாங்கள் புறந்தள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்திய பிறகே இந்த அறிக்கையை மாநில காவல்துறைக்கு அளித்துள்ளது. தற்போதைய நிலையில் அந்த அறிக்கை மாநில உள்துறைச் செயலாளரின் பரிசீலனையில் உள்ளது. உள்துறைச் செயலாளரிடமிருந்து முழுமையான அறிக்கை கிடைக்கப்பெற்றதும், இதுகுறித்து முதலமைச்சருடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்படும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட சட்ட நிபுணர்களிடம் தகுந்த ஆலோசனை பெறப்படும்" என்றார். பினராயி விஜயன் மீது வழக்குப்பதிய வேண்டும் என அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 'கேரளா அல்லா. இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/ed-writes-to-dgp-seeking-to-register-a-case-against-pinarayi-vijayan



