Vollständiger Artikel
நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்பார்கள். வேண்டியவர்களுக்கு வேண்டிய கணத்திலேயே அருளும் பெருமாள் அவர். அப்படிப்பட்ட நரசிம்ம மூர்த்தி கோயில் கொண்டிருக்கும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்று சம்பத்கிரி நரசிம்மர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ளது சம்பத்கிரி. சம்பத்கிரியின் மலையடிவாரத்தில் வேணுகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மலைக்கு மேலே நரசிம்ம மூர்த்தி கோயில்கொண்டுள்ளார். அதிலும் சம்பத்கிரி நரசிம்மர் தனிச் சிறப்பானவர். குபேர சம்பத்துகளை உடனே அருள்பவர். தொண்டை மண்டல பல்குன்ற கோட்டத்தின் போளூர் என்ற ஊர் சப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்தியர் தவம் இருந்த தலம். அதனால் இது ஆதியில் புலஸ்தியபுரம் என்று அழைக்கப்பட்டது. போளூரின் மேற்கே அமைந்துள்ள மலையே சம்பத்கிரி. இங்கேதான் குபேரனுக்குச் சகல சம்பத்துகளை வழங்கிய நரசிம்மர் அருளுகிறார். இதனால் இந்த இடத்துக்கும் சம்பத்கிரி என்று வந்ததாம். சம்பத் என்றால் செல்வம் கிரி என்றால் மலை என்றும் அர்த்தம். இதனாலே இந்த மலை அமைந்த ஊருக்கும் பொருளூர் என்று பெயராகி பின்னர் போளூர் என மருவியது என்றும் கூறப்படுகிறது. சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி புராணத் தகவல்களின்படி இங்கே புலஸ்தியர் மற்றும் பெளலஸ்தியர் ஆகிய இரு ரிஷிகளும் தவமிருந்தனர். இருவருக்கும் சேர்த்து ஒரு மாம்பழம் கிடைத்தது. அதைப் பங்கிடும் வேளையில் பௌலஸ்தியரின் இரண்டு கைகளும் காயமானது. அப்போது திருமாலை அவர் வேண்ட, இறைவனின் ஆணைப்படி 48 நாள்கள் சேயாற்றில் நீராடி, சம்பத்கிரியை வலம் வந்து நரசிம்மரை வேண்டினாராம். ஒரு மண்டல நிறைவு நாளில் சேயாற்றில் மூழ்கி எழ காயத்தால் சிதைந்த கரங்கள் சரியாகின. அதே கரங்களில் ஸ்ரீநரசிம்மர் சிலையும் கிடைத்தது. நரசிம்ம மூர்த்தியின் ஆணைப்படி அச்சிலையை மலையடிவாரத்தில் பிரதிஷ்டை செய்தார் பெளலஸ்தியர். அதேவேளை மலைமீது உள்ள நரசிம்ம ஆலயமும் அங்குள்ள நரசிம்ம மூர்த்தியும் பழைமையானவை என்கிறார்கள். ஒருமுறை இந்த மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது, ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. எல்லோரும் அச்சத்தில் ஓடிவிட்டனராம். அன்றிரவே அந்த ஊரில் வாழ்ந்த மகான் ஒருவரின் கனவில் நரசிம்மர் தோன்றி, ரத்தம் பீறிட்ட இடத்தில் தாம் லட்சுமி நரசிம்மராக எழுந்தருள உள்ளதைக் கூறினார். மக்கள் எல்லோரின் ஆதரவால் அங்கே நரசிம்மரின் ஆலயம் உருவானதாம். இந்த நரசிம்மரை ஆராதித்து திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள், ஹரிதாஸ் சுவாமிகள், அச்சுததாசர், வெட்டவெளி சுவாமிகள் போன்ற அருளாளர்கள் கீர்த் தனைப் பாடல்கள் புனைந்து பாடியுள்ளனர். சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி கோயில் தாயார் பல்லவர்கள், நடுநாட்டு அரசர்கள் உள்ளிட்ட பலரது ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் சிறப்புற்று விளங்கியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் ஹொய்சாளர்கள், விஜயநகர அரசர்கள் காலத்திலும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் நடை பெற்றுள்ளன. குறிப்பாக விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த ஓகூர் சீனிவாசராவ், இக்கோயிலின் ஸ்ரீதேவி - பூதேவி தாயார் சமேத நரசிம்மர் விக்ரஹத்தையும் செய்து அருளினார் என்கிறது தலவரலாறு. பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கற்சிலைத் திருமேனியும் செய்து சம்ப்ரோக்ஷணம் நடத்தினார் எனப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்ரமண்ய சுவாமி: நொச்சி மாலை... கடன் பிரச்னை தீர வேல் அர்ச்சனை! 850 படிகள் தாண்டிச் செல்ல சம்பத்கிரி மலைக் கோயில் அடையலாம். அடிவாரத்தில் அனுமன் சந்நிதி உள்ளது. மலைப்பகுதி வழியில் இரண்டு ஓய்வு மண்டபங்கள் இரண்டு குளிர்சுனைகளும் உள்ளன. மலைக்கோயிலின் கருவறையில் தெற்குப் பார்த்து சுயம்பு வடிவில் அருள்கிறார் நரசிம்மர். அவரின் முன்பு லட்சுமி நரசிம்மர் சிலை வடிவில் திகழ்கிறார். வலது புறம் கனகவல்லித் தாயார் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். மலைமீது பிரம்ம தீர்த்தமும், மலைக்குக் கீழே புலஸ்திய தீர்த்தமும் உள்ளன. முருகப்பெருமான் உருவாக்கிய சேயாறும் இத்தலத்தின் தீர்த்தமே. சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி கோயில் மலைக்கோயிலில் சுவாதி நாள், மாதப் பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி, சப்தமி ஆகிய நாள்களில் அதிகாலை திருமஞ்சனம் விசேஷமானது. பிரதோஷ நாளில் சம்பத்திரி லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள பாமா ருக்மிணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து வழிபடுவது இங்கு சிறப்பு. மேலும் தமிழ் வருடப் பிறப்பு படிவிழா, வைகாசி பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி விழாக்கள், வைகுண்ட ஏகாதசி போன்றவையும் விசேஷம். ஊரில் உள்ள வேணுகோபாலர் ஆலயத்திலும் இதே விசேஷங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்ரா பெளர்ணமி அன்று தீர்த்தவாரி வைபவமும் நிகழும். சம்பத்கிரி நரசிம்ம சுவாமிக்குப் படைத்த பானக தீர்த்தத்தைப் பருகினால், நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை சம்பத்கிரி சென்று நரசிம்ம மூர்த்தியை தரிசித்து வாருங்கள் நோய்கள் தீர்ந்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வீர்கள். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்: வினைகள் தீர்க்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சந்நிதி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



