திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை வணங்கி குறுகிய துவாரம் வழியாக வெளியில் வந்தால் `முக்தி’ கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த துவாரம் மிகவும் குறுகலாக இருப்பதால் உடல் பருமனான பக்தர்கள் நுழைந்து வெளியே வருவது சிரமம். இந்த நிலையில்தான் கடந்த 24-ம் தேதி இந்த துவாரத்தில் நுழைந்த ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆடி மாத பவுர்ணமி இன்று இரவு 7.32 மணிக்கு தொடங்குகிறது. இதனால், கிரிவலப்பாதையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இடுக்குப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபடுவார்கள். உடல் பருமன் பக்தர்கள் நுழைய தடை இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் நுழைவு வாயில் பகுதியில், `உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் முக்தி துவாரத்தில் நுழைய தடை விதிக்கப்படுகிறது’ என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். அவர்கள் இடுக்குப் பிள்ளையாரை வழிபட உள்ளே நுழைந்து, அதில் யாராவது சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பது சிரமம். எனவே, வயதானவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் துவாரத்தின் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பவுர்ணமி நாள்கள் தவிர, மற்ற நாள்களில் தினமும் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே இங்கு பக்தர்கள் தரிசனம் செய்யவும், துவாரம் வழியாக வெளியே வரவும் அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/spiritual/idukku-pillaiyar-temple-in-tiruvannamalai-overweight-devotees-are-barred-from-entering




