சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இன்று உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். அதிரடி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் அபாரமான பீல்டிங் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவர், இந்த உயரத்தை எளிதில் அடையவில்லை. வறுமை, பசி, பொருளாதார நெருக்கடி என பல சவால்களை தாண்டியே இன்று இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். தொழிலில் நஷ்டம் ஹர்திக் பாண்டியா 1993-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி குஜராத்தின் சூரத்தில் பிறந்தார். அவரது தந்தை ஹிமான்ஷு பாண்டியா கார் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். ஹர்திக் மற்றும் அவரது அண்ணன் குருணால் பாண்டியா ஆகியோரின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காக குடும்பமே வதோதராவுக்கு குடிபெயர்ந்தது. ஆனால் அங்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. ரூ.400 சம்பளம். மேகி சாப்பிட்டே பயிற்சி பொருளாதார சிக்கல் காரணமாக ஹர்திக் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் உள்ளூர் போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டிக்கு வெறும் ரூ.400 மட்டுமே சம்பாதித்தார். சில நாட்களில் பசியை போக்கிக்கொள்ள ஒரு நாளைக்கு இரண்டு வேளை மேகி நூடுல்ஸ் மட்டுமே சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டதாக அவர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சொந்தமாக கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கும் வசதியும் இல்லாததால், மற்ற வீரர்களிடம் இருந்து பேட் மற்றும் கிட் வாங்கி விளையாடியுள்ளார். வாழ்க்கையை மாற்றிய ஐபிஎல் 2015-ம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்தது. அதுவே அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர், குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக உயர்ந்தார். கேப்டனாகவும் சாம்பியனாகவும் சாதனை 2022-ம் ஆண்டு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக், முதல் சீசனிலேயே அணியை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல செய்து வரலாறு படைத்தார். அதனைத் தொடர்ந்து இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் துணை கேப்டனாக உயர்ந்த அவர், 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றினார். விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி வறுமை, பசி, பொருளாதார சிக்கல்கள் என வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் உழைத்து உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் எந்த சூழலையும் வென்று சாதிக்க முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கையே மிகச்சிறந்த உதாரணம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/hardik-pandya-a-story-of-struggle-he-dropped-out-of-school-due-to-financial-constraints-survived-on-noodles-now-a-star-of-team-india




