சென்னை, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயனடைவதற்காக அனைத்து பள்ளிகளிலும் முகாம்கள் நடத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சிறுசேமிப்பு திட்டம் 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' (எஸ்.எஸ்.ஒய்.). தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' என்ற இயக்கத்தின் கீழ் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 8.2 சதவீதம் வட்டி பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை ஓர் நிதியாண்டில் நாம் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளை குறிப்பிட்டு பெற்றோர் வருமான வரி விலக்கும் பெற முடியும். ஒரு குழந்தை பிறந்த உடனேயே மாதந்தோறும் முதலீடு செய்ய தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நமது முதலீட்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. முன்னணியில் தமிழ்நாடு இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3 கோடியே 92 லட்சத்து 64 ஆயிரத்து 747 கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 577 கோடியே 20 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 38 லட்சத்து 90 ஆயிரத்து 666 கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.31 ஆயிரத்து 211 கோடியே 29 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11.3 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முன்னணியில் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் முகாம் கணக்கு தொடங்கும் நேரத்தில் பெண் குழந்தை இந்தியக் குடியுரிமை பெற்றவராகவும், 10 வயதுக்குக் குறைவானவராகவும் இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மட்டுமே இந்தக் கணக்கை தொடங்க முடியும். ஒரு பெண் குழந்தை பெயரில் ஒரு கணக்கு மட்டுமே ஆரம்பிக்க முடியும். ஒரு குடும்பத்தில் பல பெண் குழந்தைகள் இருந்தால், 2 பெண் குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் கணக்குகளை தொடங்கலாம். இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில், அதிக மாணவிகளை சேர்ப்பதற்காக, அனைத்து பள்ளிகளிலும் முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டுக்கான கல்வி திட்டம் தற்போது தான் தொடங்கப்பட்டு இருப்பதால் வரும் மாதங்களில் பள்ளிகளில் முகாம்களை நடத்தி சிறுமிகளை சேர்க்க இருக்கிறோம் என்று தபால்துறை உயர் அதிகாரிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/selva-magal-savings-scheme-camp-in-schools-a-department-of-posts-initiative




