மும்பை, மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் அமைந்துள்ள பிரபல தாஜ் ஓட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு 12.13 மணிக்கு நவி மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், ‘மும்பை தாஜ் ஓட்டலில் தாவூத் ஒரு வெடிகுண்டை வைத்துள்ளார்’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இந்த தகவல் உடனடியாக மும்பை மத்திய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொலாபா போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து தாஜ் ஓட்டல் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஓட்டலின் வரவேற்பு அறை, நீச்சல் குளம், உணவகங்கள், பார்க்கிங் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, மிரட்டல் அழைப்பு விடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்தவர்களின் இருப்பிடத்தை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அந்த அழைப்பு மும்பையின் துர்பே பகுதியில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மும்பையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ் ஓட்டல் மீது, கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/unidentified-persons-issue-bomb-threat-to-mumbais-taj-hotel




