மதுரை, மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேக பெருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலையில் நடக்கிறது. திருப்பணிகள் நிறைவு மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும். ஆனால், தீ விபத்தில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்ததால், அதன் சீரமைப்பு பணிக்காக கும்பாபிஷேக விழா தாமதம் ஆனது. தற்போது வீரவசந்தராயர் மண்டப பணிகள் நிறைவு பெற்று, கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் அதனை பார்வையிட்டனர். இதற்கிடையே பல மாதங்களாக ராஜகோபுரம் உள்பட கோவிலின் அனைத்து இடங்களிலும் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடந்து நிறைவு பெற்று கும்பாபிேஷகத்துக்கு கோவில் தயார் ஆனது. அதன்படி 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. யாக பூஜை இதற்காக பல லட்ச ரூபாய் மதிப்பில் வடக்கு ஆடி வீதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு, முதல் கால யாக பூஜை கடந்த 11-ந் தேதி மாலையில் தொடங்கியது. நேற்று காலையில் 8-ம் கால யாக பூஜையும், மாலையில் 9-ம் கால யாக பூஜையும் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் இந்த பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக 414 பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு 10-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பல்வேறு வேள்வி பூஜைகளுக்கு பின்னர், காலை 5 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்களுக்கு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. 11-ம் கால யாக பூஜைகள் பின்னர் டங்கா மாடு, யானை, மேளதாளம் முழங்க அந்த யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி அனைத்து பரிவார சுவாமி சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்படுகின்றன. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு அந்த புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. குறிப்பாக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. இன்று மாலையில் 11-ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், ராஜகோபுரங்கள், சன்னதி கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு இந்த பூஜைகள் நடக்கின்றன. நாளை மகா கும்பாபிஷேகம் விழா நாளான நாளை அதிகாலையில் 4 மணி அளவில் 12-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 5.45 மணி அளவில் கடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள், தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி சென்னை, போடி, ராமேசுவரம், நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில்களும், தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்களும் மதுரைக்கு இயக்கப்படுகின்றன. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், சுற்றுப்பகுதிகள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. தூங்காநகரான மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/meenakshi-amman-temple-consecration-madurai-wears-a-festive-look-devotees-flock-in




