சென்னை, நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான வன்முறை, மற்றும் தொகுதி மறுவரையறை என எதற்குமே அவையில் நின்று நேருக்கு நேர் பதில் சொல்லப் பயந்தவர் மத்திய மந்திரி அமித்ஷா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் "அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை மந்திரி அமித்ஷா தயாராக இருந்தபோது, ஓடி ஒளிந்தது ராகுல் காந்திதான்" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைப் பார்த்து "நழுவி ஓடுகிறார்" என்று நீங்கள் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை மந்திரி தயாராக இருந்தபோது, "நேருக்கு நேர் நின்று விவாதிக்கத் தைரியமில்லாமல்" சபைக்கு வரமாட்டேன் என ஓடி ஒளிந்தது உங்கள் 'இளம்' தலைவர் ராகுல் காந்தி தான் என்பதை இந்த நாடே அறியும். (எங்கள் உள்துறை மந்திரி விவாதத்திற்கு அழைப்பு விடுத்த காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன், பார்த்துத் தெரிந்து கொள்ளவும்). நாடாளுமன்றம் நடைபெறும் மிக முக்கியமான நேரத்தில் கூட வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிடும் ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதியைத் தலைவராக வைத்துக்கொண்டு, நீங்கள் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை 2014 முதல் 2024 வரையிலான இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ‘கூகுள்’ செய்து பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே தம்பி! அதனை விட ஒரு பெரிய ஆதாரம் வேண்டுமா என்ன? 'வாள் ஏந்தியவர்கள் அஞ்சப்போவதில்லை' என்று வசனம் பேசுகிறீர்கள். மாணிக்கம் தாகூர் அவர்களே, உங்கள் கையில் இருப்பது எஃகு வாள் அல்ல; அட்டை கத்தி. மேலும், வடிவேலு பாணி நகைச்சுவை பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் 'EVM இயந்திரத்தில் கோளாறு' என்று நீங்கள் சொல்லும் சாக்குப்போக்குகளை விடச் சிறந்த நகைச்சுவை வேறு இருக்க முடியுமா என்ன? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/when-amit-shah-was-ready-to-answer-rahul-gandhi-ran-away-nainar-nagendran




