Vollständiger Artikel
காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், இன்று( ஜூன்,24) காலை வழக்கம்போலத் தொடங்கிய மாமன்றக் கூட்டம், யாரும் எதிர்பாராத ஒரு ‘சினிமா பாணி’ திருப்பத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வழக்கமான வார்டு கோரிக்கைகள், ரோடு, சாக்கடைப் புகார்களைத் தாண்டி, "மாமன்றக் கூட்டத்தில் நடிகை த்ரிஷாவின் படத்தை உடனே வைக்க வேண்டும்" என்று சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் திடீரெனக் கோரிக்கை வைக்க, அரங்கமே அதிரடி சலசலப்பில் மூழ்கியது. காரைக்குடி டவுன் 11-வது வார்டு (வ.உ.சி ரோடு, பர்ஸ்ட் பீட் பகுதி) சுயேச்சை உறுப்பினராக இருப்பவர் சி.மெய்யர். காரைக்குடி மாநகராட்சி கடந்த 20 வருடங்களாகத் தொடர்ந்து சுயேட்சைக் கவுன்சிலராக இருக்கும் இவர், கூட்டத்தில் எழுந்து திடீரென, "த்ரிஷா படத்தை இங்கே வச்சே ஆகணும்... ஆட்சி மாற்றத்துக்கு காரணமே அவங்கதான்! எனவே அவங்க போட்டோவை வைக்கணும். அடுத்த சி.எம் அவங்கதான்!" என்று மெய்யர் அதிரடியாகக் கொளுத்திப் போட, மாமன்றத்தில் இருந்த பிற கட்சி உறுப்பினர்கள் "என்னது... த்ரிஷா படமா? ஏன் வைக்கணும்?" என்று ஒட்டுமொத்தமாகக் கொதித்தெழுந்தனர். இதனால் மன்றமே சிறிது நேரம் போர்க்களமாக மாறியது. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதுகுறித்து, காரைக்குடி மாமன்ற உறுப்பினர் சி.மெய்யரைத் தொடர்புகொண்டு ‘ நடந்தது என்ன?' என்று விசாரித்தோம். "நான் ஒன்னும் சும்மா ஏனோதானோன்னு த்ரிஷா படத்தை வைக்கச் சொல்லலை. அங்கே நடந்த கூத்தே வேற. முதல்ல நகர்மன்றக் கூட்டத்துல போட்டோ வைக்கிறதுலதான் பெரிய பிரச்சனையே ஓடிக்கிட்டு இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி யாரோ கொண்டு வந்து விஜய்யோட படத்தை ஆபீஸ்ல வச்சுட்டாங்க. சட்டப்படி அங்கே யார் படம் இருக்கணுமோ, அது இருக்கணும்... அதுல எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர் சி.மெய்யர் ஆனா, அங்கே முன்னாடி இருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினோட படம் இப்போ அங்கே இல்லை! நான்தான் முதல்ல அந்தப் பிரச்சினையைக் கிளப்புனேன். 'விஜய் படம் வச்சிருக்கீங்களே... சரி, ஆனா முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் எங்கே? அதை எடுத்து முறையா எல்லா தலைவர்களோட படத்தோடயும் சேர்த்து வைக்கணும். அந்தப் படத்தை வச்சுட்டு அப்புறம் கூட்டத்தை நடத்துங்க'ன்னு சண்டை போட்டேன். நான் சொன்னதுக்கப்புறம்தான் திமுக கட்சிக்காரங்களும் 'ஆமா, ஸ்டாலின் படம் எங்கே?'னு கேட்க ஆரம்பிச்சாங்க. உடனே அங்கே இருந்த அதிமுக-வினர், 'அப்படின்னா எடப்பாடி பழனிசாமி படத்தை வைக்கணும், ஜெயலலிதா படத்தை வைக்கணும்'னு அவங்க பங்குக்குக் கிளம்புனாங்க. ரோடு, தண்ணிப் பிரச்னையைப் பத்திப் பேசாம, ஆளுக்கொரு படத்தைக் கொண்டு வந்து சண்டை போட்டுக்கிட்டு, கூட்டத்தையே நடத்தவிடாம பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எல்லாரும் படம் கேட்டு சண்டை போடுறாங்களேன்னு எனக்கு ஒரு கட்டத்துல கோவம் வந்துடுச்சு. அந்தக் கோபத்துலேதான், 'எல்லா படத்துக்கும் முட்டிக்கிட்டு சண்டை போடுறீங்களே... வருங்கால முதலமைச்சர் த்ரிஷா படத்தை வச்சுட்டு கூட்டத்தை நடத்துங்கப்பா' அப்படின்னு ஒரு கிண்டல் தொணியிலதான் நான் சொன்னேன். ஏன்னா, 'அரசியல் மாற்றமே அந்த அம்மாவாலதான் (த்ரிஷா) வந்திருக்கு, அவங்கதான் அடுத்த சி.எம்'னு தவெக கட்சிக்காரங்களே பேச ஆரம்பிச்சுட்டாங்களே..! ஒருத்தரோட குடும்பப் பிரச்னையைப் பெருசு பண்ணி, விளம்பரமாக்கி, இன்னைக்கு அது இவ்வளவு தூரம் வளர்ந்து நிக்குது. நிஜப் பிரச்னையைப் பேசாம படத்துக்காக அடிச்சுக்கிறவங்களுக்குப் புரிய வைக்கவே நான் அப்படிப் பேசினேன். மத்தபடி உண்மையிலேயே த்ரிஷா படத்தை எல்லாம் இந்த மன்றத்துலே வைக்கச் சொல்ல முடியுமா?" என்று சிரித்துக்கொண்டே முடித்தார் கவுன்சிலர் மெய்யர். போட்டோ போரில் மூழ்கிக் கிடந்த மாமன்றத்தை, தன் பாணி 'கவுன்டர்' மூலம் அதிர வைத்த சுயேச்சை கவுன்சிலரின் இந்த விவகாரம்தான் இப்போது எல்லா இடங்களிலும் ஹாட் டாபிக். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten


