கோவை, சத்குருவின் ஈஷா அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ஈஷா கிராமோத்சவத்தின் 18-ஆவது பதிப்பிற்கான முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நேற்று (01/08/2026) கோலாகலமாகத் தொடங்கின. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி. கே. பிரபு தொடங்கி வைத்தார். இதேபோல், உடுமலைப்பேட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, பூந்தமல்லியில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். ஹரீஷ், மதுரை கோச்சடையில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். தங்கபாண்டி, ஆற்காட்டில் ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. தாஹிரா, ஓமலூரில் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். மணி, முசிறியில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. விக்னேஷ் மற்றும் திருத்தணியில் திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுபம் திமான், ஐ.பி.எஸ். ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். ஈஷா கிராமோத்சவத்தில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி இல்லை. ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் தொடங்கின முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் தமிழ்நாட்டில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (ஆக.1) போட்டிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வாலிபால் பிரிவில் 2,400 அணிகளைச் சேர்ந்த 24,000 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 620 அணிகளைச் சேர்ந்த 6,200 வீரர்களும் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் தலா 45 அணிகள் வீதம், இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 30,000 கிராமப்புற மக்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதியோகி வளாகத்தில் இறுதிப்போட்டிகள் அடுத்ததாக இரண்டாம் கட்ட மண்டல (டிவிஷனல்) அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3 மற்றும் 4-வது வார இறுதி நாட்களில் நடைபெறும். கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப்போட்டிகள் என மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவின் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6-ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறவுள்ளன. ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ.1 லட்சம், நான்காம் இடத்திற்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும். இதுதவிர கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுத் திருவிழாவில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. வட இந்தியாவிலும் போட்டிகள் கடந்த ஆண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம், இந்த ஆண்டு வட இந்தியாவிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவில் சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் அதிகமான கிராமப்புற வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். கிராமோத்சவத்தின் நோக்கம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமைக்கும் போதைப்பழக்கத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்தச் சூழலை மாற்றி, "கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும்" என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' தொடங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-18th-isha-gramotsavam-kicked-off-in-tamil-nadu




