சென்னை, தவெக அரசின் பட்ஜெட்டில் திருப்புகிற பக்கங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகளே ஜொலிக்கின்றது என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட். செய்வதை மட்டும் தான் சொல்வோம் எனக்கூறி அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டம் நடத்தி அமைச்சரவை கூட்டம் நடத்திய பின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் உள்ளது. உரிமைத் தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை. திருப்புகின்ற பக்கமெல்லாம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறினார். ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் இடம் மாறி இருக்குறீர்கள் பரவாயில்லை. அதற்காக இவ்வளவு துதி பாட வேண்டிய அவசியமில்லை. அம்மாவால் 3 முறை முதல்-அமைச்சராக்கப்பட்ட ஓ.பி.எஸ் பேச்சை பார்த்து நாடே சிரித்து கொண்டிருக்கிறது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என்றார். மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், இடத்தை மாற்றியபோது அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதல்-அமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் என்றார். இடமும் மாறியது, படமும் மாறியது - ராஜ்மோகன் ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன். திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன. கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர். தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதல்-அமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்றார். சட்டசபையில் படம் வைப்பது தொடர்பான நகைச்சுவை பேச்சு சலசலப்பாக மாறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/whose-picture-is-in-the-pocket-a-heated-debate-between-ops-and-sengottaiyan




