மும்பை, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை அந்தாரா பானர்ஜி, கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம் சூரத்துக்கு ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஸ்லீப்பர் பெட்டியில் முன்பதிவு செய்துவிட்டு ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறின்போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் எஸ்.ஐ., யாமினியை நடிகை அந்தாரா கத்தியால் குத்தியதாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் குறிப்பிடப்பட்டது நடிகை அந்தாரா இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அந்தாரா சோஹம் பானர்ஜி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான பெயரால் குழப்பம் ஏற்பட்டு, நடிகை அந்தாரா கைது செய்யப்பட்டுவிட்டதாக தவறான தகவல் பரவியுள்ளது. இது குறித்து நடிகை அந்தாரா பானர்ஜி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) குறித்து செய்தி வெளியிடும்போது எனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் நான் இல்லை. அந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எப்.ஐ.ஆர். நகலை சரிபார்த்ததில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் தானேவைச் சேர்ந்த மாடலான அந்தாரா சோஹம் பானர்ஜி (Antara Soham Banerjee) என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டும் முற்றிலும் வெவ்வேறு நபர்கள். அந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/railway-police-officer-stabbed-it-wasnt-me-actress-clarifies



