ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசித்தி பெற்ற புனித சந்தியாகப்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனிதசந்தியாகப்பருக்கு தாமிரபரணி நதிக்கரையில் 426 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த ஆலய திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொருபம் குருசு கோவிலில் இருந்து பக்தர்கள் கொடியேந்தி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, நற்கருனை ஆராதனை நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் ஆலயத்தில் காலை, மாலையில் சிறப்புத் திருப்பலிகள், நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. தேர் பவனி விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, 5.50 மணி மற்றும் 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. 10 மணிக்கு கோவிலில் தேர் பவனி நடைபெற்றது. மிக்கேல் தூதர் முன்செல்ல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும், ஆலயத் திருத்தேரில் குழந்தை இயேசுவை கையில் தூக்கியபடி மாதாவும் வீதியுலா சென்று அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு வடம் பிடித்த தேர் இழுத்தனர். அப்போது சிறு குழந்தைகளை மாதா மற்றும் சந்தியாகப்பரின் காலடியில் வைத்து ஆசி பெற்றனர். தேர் பவனியின்போது பக்தர்கள் உப்பு, மிளகு, மலர் தூவி வழிபட்டனர். தங்களது குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும், சந்தியாகப்பருக்கு குழந்தைகளை ஏலம் விட்டும் வேண்டுதலை நிறைவேற்றினர். தேர் மதியம் கோவில் நிலையை வந்தடைந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இன்று காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/st-james-church-ther-bhavani-in-srivaikuntam




