ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் 4ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அறிவித்துள்ளார். மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படங்களுள் ஒன்றாக கருதப்படும் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லால் மற்றும் மீனா நடித்த இந்த படம் 2013-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தொடரும் ‘திரிஷ்யம்’ வெற்றிப்பயணம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம் 2’ திரைப்படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியான அந்த படம் விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றி கண்டது. இதையடுத்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘திரிஷ்யம் 3’படம் ரூ.330 கோடி வசூல் சாதனையுடன் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், மோகன்லால் ‘ஜார்ஜ்குட்டி’ கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் “ஒவ்வொரு பாகம் முடியும்போதும், அடுத்த பாகத்திற்கான கதையை யோசிக்குமாறு தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவதையும், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது மூன்றாவது பாகத்தையும் யோசிக்கச் சொன்னார்கள். இப்போது நான்காம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்குமாறு கூறுகிறார்கள். இருப்பினும், ‘திரிஷ்யம் 3’ வசூல் சாதனை படைத்ததற்காக அவசர அவசரமாக அடுத்த பாகத்தை எடுக்க விருப்பமில்லை. கதாபாத்திரங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பற்றி யோசித்து நிதானமாகவே கதையை உருவாக்க விரும்புகிறேன்” என பேசியிருந்தார். விரைவில் “திரிஷ்யம் 4” படம் இந்த நிலையில், மனோரமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆண்டனி பெரும்பாவூர், “திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும். இதை நான் மனதார, முழு நம்பிக்கையோடு கூறுகிறேன்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/producer-antony-perumbavoor-update-mohanlals-drishyam-4-film




