சென்னை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, பழனியின் மையப்பகுதியில் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ரூ. 100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு மாறாக மூன்று தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது எப்படி? நில மோசடி இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், பழனி அருகே உள்ள பாப்பாங்குளம் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி அருகே உள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்; இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். குற்றச்சாட்டு இந்த குற்றச்சாட்டு வெளியானவுடன், அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மை வெளிவராது. ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு மாதத்தில், சட்டமன்றத்திற்கு உள்ளும், பொதுவெளியிலும் விஜய் தூய ஆட்சியைப் பற்றி வலியுறுத்தி வருகிறார். ஆனால், பழனி முருகன் கோவில் சொந்தமான நிலம் சட்டவிரோதமாக சில தனிநபர்களின் பெயரில் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலிடப் புள்ளிகளின் ஆதரவு இல்லாமல் இந்த குற்றம் நடைபெற வாய்ப்பில்லை. தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி வந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுவாகும். ஒரு அரசை வீழ்த்த 100 குற்றச்சாட்டுகள் தேவையில்லை; வலுவான ஒரு குற்றச்சாட்டே போதுமானது. வலியுறுத்தல் எனவே, விஜய் அரசு பழனி முருகன் கோவில் மோசடி நிலப்பத்திரபதிவு உண்மைத்தன்மையை நடுநிலையான, நேர்மையான, சுதந்திரமான விசாரணை, குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதியின் கீழ் நடத்தப்பட்டு, அந்த மேலிடப்புள்ளி யார் என்பது ஆன்மீகப் பெரியோர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டு சமந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-temple-land-deed-registration-scam-who-were-the-top-brass-involved-krishnasamy-questions




