ஒரு நாடு தனது நாட்டு மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வெளிநாடுகளை சார்ந்திருக்காமல் தானே உற்பத்தி செய்வதே உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலையை எட்டவைக்கும். உணவுப்பொருட்கள் இறக்குமதி அதாவது ஒரு நாடு எத்தகைய செல்வவளம் மிக்கதாக இருந்தாலும் அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு இணையானதாக கருத முடியாது. ஏனெனில் பல பணக்கார நாடுகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்திருக்கின்றன. மாவுச்சத்து மிகுந்த முக்கிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை ஒரு நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான முக்கிய உணவு வகைகளாகும். ஒரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய விவசாய உற்பத்தி நாடுகள் கூட இந்த 7 முக்கிய உணவு வகைகளில் குறைந்தபட்சம் ஒரு உணவுப்பொருளுக்காவது இறக்குமதியை சார்ந்திருக்கின்றன. அதற்கு இடம் கொடுக்காமல் ஏழு முக்கிய உணவு வகைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே நாடு உலகில் ஒன்று மட்டுமே உள்ளது. அதன் பெயர், கயானா. இந்நாடு உணவு உற்பத்தியில் எவ்வாறு தன்னிறைவு பெற்றது என்பது பற்றி பார்ப்போமா? ஆய்வில் வெளியான தகவல் 'நேச்சர் புட்ஸ்' நடத்திய ஆய்வின்படி, 186 நாடுகளில், தென் அமெரிக்க நாடான கயானா மட்டுமே தனது அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தியை முழுமையாக சார்ந்திருக்கக்கூடிய நாடாக திகழ்கிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்து வகைகள் அனைத்தையும் உற்பத்தி செய்வதிலும், உள்நாட்டுத் தேவையைத் தாண்டி மாவுச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதிலும், உணவு உற்பத்தியில் உலகளவில் தனித்துவமான இடத்தையும் கயானா பிடித்துள்ளது. என்ன காரணம்? சீனா மற்றும் வியட்நாம் ஆகியவை ஆறு முக்கிய உணவு வகைகளில் தன்னிறைவு பெற்று கயானாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன. கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த பட்டியலில் பின் தங்கியுள்ளன. கயானா இந்த நிலையை எட்டியதற்கு காரணம் இயற்கையை எந்த வகையிலும் சேதப்படுத்தாதது தான். ஆம்! மற்ற தென் அமெரிக்க நாடுகள் விவசாயத்திற்காக நிலத்தை விரிவாக்கம் செய்வதற்காக காடுகளை அழிக்கின்றன. ஆனால் கயானா தனது காடுகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இன்றும் பாதுகாத்து வருகிறது. சாதகமான காலநிலை இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள ராயல் அக்ரிகல்சுரல் பல்கலைக்கழகத்தின் வேளாண் பேராசிரியரான நிக்கோலா கேனனின் கூற்றுப்படி, "கயானாவின் கடலோரப் பகுதியின் காலநிலை பயிர் உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. மேலும் பூமத்திய ரேகையில் கயானாவின் புவியியல் அமைவிடம், ஆண்டு முழுவதும் நிலவும் வெப்பம், போதுமான மழைப்பொழிவு அதிக ஈரப்பதம் உள்ளிட்டவை கயானாவின் உணவு உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. அமேசான் நதி மூலம் படியவைக்கப்பட்ட வளமான மண்ணும், அந்நாட்டின் உணவு தன்னிறைவுக்கு முக்கிய பங்காற்றுகிறது. மாறுபட்ட அணுகுமுறை கயானாவின் வெற்றிக்கான முக்கிய சூத்திரம், விவசாயத்தில் மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டதுதான். அதாவது அந்நாடு ஊடுபயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரே வயலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒன்றாக பயிரிடுவதன் மூலம் அதிக சாகுபடிக்கும். வருமானத்திற்கும் வழிவகை ஏற்படுகிறது. உதாரணமாக மக்காச்சோளமும், சோயா பீன்ஸும் ஒரே மண்ணில் அருகருகே விளைவிக்கப்படுகின்றன. அப்படி ஊடுபயிர் சாகுபடிக்கு வெவ்வேறு பயிர்களை ஒன்றாக விதைப்பதன் மூலம் சாதகமற்ற வானிலை, பூச்சித்தொல்லை காரணமாக ஒரு பயிர் அழிந்தால், மற்றொரு பயிர் தப்பிப்பிழைக்க முடியும். வருமான இழப்பு ஏற்படாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/do-you-know-which-is-the-only-country-in-the-world-that-is-self-sufficient-in-meeting-its-food-needs




