குஜராத் மாநிலம் மோர்பி அருகில் உள்ள விர்பர்தா என்ற கிராமத்தில் இருக்கும் கிணறு ஒன்று அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. கடந்த 5 நாட்களாக அக்கிணற்றில் ஒரு அசாதாரண செயல்பாடு இருந்து வருகிறது. 18 அடி ஆழமுள்ள கிணறு திடீரென நிரம்பி கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து அலையடித்து வருகிறது. கிணற்றுத்தண்ணீர் வழக்கமாக அமைதியாக எந்த வித அசைவும் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த கிணற்று தண்ணீர் தொடர்ந்து அலைகளை ஏற்படுத்திய வண்ணம் இருப்பதால் கிராமவாசிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று இந்த நிகழ்வு சிறிது நேரம் நின்றது. அதன் பிறகு மீண்டும் அதே போன்று தண்ணீர் அலையடித்தபடி குலுங்கிக்கொண்டிருக்கிறது. நில அதிர்வு காரணமாக இது நடந்திருக்கலாம் என்று கிராம மக்கள் ஆரம்பத்தில் அச்சம் அடைந்தனர். ஆனால் அது போன்ற எதுவும் கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இயற்கையான புவியியல் செயல்முறை காரணமாகவே இது நிகழ்வதாகவும் குறிப்பிட்டனர். இது குறித்து கிணற்றின் உரிமையாளர் பிரஞ்சீவன் சதாரியா கூறுகையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை முதலில் கவனித்தேன். ஞாயிற்றுக்கிழமை நான் எனது பண்ணைக்கு வந்தபோது, கிணற்றில் இருந்து தண்ணீர் கரையில் கொட்டிக் கொண்டிருந்தது, அன்றிலிருந்து இன்றுவரை அதே நிலை தொடர்கிறது," என்று அவர் கூறினார். இக்கிணறு மூன்று மாதங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தண்ணீர் முதலில் குலுங்கியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். செவ்வாய் கிழமை அது நின்று போனது. ஆனால் புதன் மற்றும் வியாழன் மீண்டும் தண்ணீர் குலுங்க தொடங்கியது என்றும் அவர் தெரிவித்தார். மர்மமான கிணறு பற்றிய செய்தி பரவியதும், விர்பர்தா மற்றும் அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அருகில் உள்ள நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகளும், தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் கண்டறிய வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் பின்னணியில் நில அதிர்வு நடவடிக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று மாவட்ட புவியியலாளர் ஜே.எஸ்.வதேர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''இது நில அதிர்வு அல்ல. மேலோட்டமாகப் பெய்த மழையைத் தொடர்ந்து, நிலத்தடி நீர் ரீசார்ஜ் செய்யப்பட்டு, பாறைகளின் துளைகளில் காற்று வெளியேறி, கிணற்றில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது," என்று வதேர் கூறினார். மோர்பி மாவட்ட ஆட்சியர் ஸ்வப்னில் கரே இது குறித்து கூறுகையில்,''மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், காந்திநகரில் இருந்து ஒரு நிபுணர் குழு விரிவான அறிவியல் ஆய்வுக்காக அந்த இடத்தைப் பார்வையிடும்'' என்றும் கூறினார். மழையால் நிலத்தடி நீர்நிலைகள் விரைவாக ரீசார்ஜ் செய்யப்பட்டதாலும், கிணற்றுக்கு அடியில் உள்ள பாறைகளின் துளைகளில் இருந்து வெளியேறும் காற்று தொடர்ச்சியான இந்த கொந்தளிப்பை உருவாக்குவதாகவும், இதன் விளைவாக நீரின் மேற்பரப்பில் தொடர்ந்து சிற்றலைகள் காணப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் காந்திநகரில் இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/well-overflowing-and-water-churning-people-flock-to-see-a-mysterious-well-in-gujarat




