சமூக வலைதளங்களில் நாம் பகிரும் ஒரு புகைப்படம், ஒரு வீடியோ. அது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா? அல்லது, நமக்கே தெரியாமல் நமக்கெதிரான ஒரு கண்ணியாக மாறி, நமது நிம்மதியையே குலைத்துவிடுமா? நாக்பூரில் நடந்திருக்கும் ஒரு சம்பவம், இரண்டாவது கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தன்னை ஒரு பெரும் கோடீஸ்வரனாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் காட்டிக்கொண்டதன் விளைவு, ஒரு குடும்பத்தையே மரணத்தின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. நண்பன் என்று நம்பியவனே வில்லனாக மாறி, வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு, குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக 40 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கொடூரம் அரங்கேறியுள்ளது. நாக்பூரின் பெல்டரோடி பகுதியைச் சேர்ந்தவர் சமீர் யச்சல்வார். தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், விலையுயர்ந்த கார்கள், கட்டுக்கட்டாகப் பணம், ஆடம்பர பங்களா எனத் தனது செல்வச் செழிப்பான வாழ்க்கையை சித்தரிக்கும் வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், அந்த ஆடம்பரமெல்லாம் நிஜமல்ல; செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு மாயை என்பதை அவரைத் தவிர வேறுயாரும் அறிந்திருக்கவில்லை. இந்த மாயவலையில் சிக்கியவர்தான் சமீரின் நண்பரான ஷ்ரேயாஸ் போர்கர். AI மூலம் ஆடம்பரம் | கொள்ளை சமீரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களைப் பார்த்து, அவரிடம் கட்டுக்கட்டாகப் பணமும், கிலோ கணக்கில் நகைகளும் வீட்டில் குவிந்திருப்பதாக முழுமையாக நம்பியிருக்கிறார் ஷ்ரேயாஸ். நண்பனின் செல்வத்தின் மீது ஆசை கொண்ட அவர், தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து சமீரின் வீட்டைக் கொள்ளையடிக்க ஒரு கச்சிதமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். காவல்துறை விசாரணையில் வெளிவந்த தகவல்கள், ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு இருந்தன. சம்பவத்தன்று சமீர் வேலைக்குச் சென்ற பிறகு, அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த சுமார் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடியுள்ளனர். இந்த கொடூரம் நடந்தபோது, சமீரின் மனைவியும், குழந்தைகளும் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்தனர் என்பதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. மாலையில் வீடு திரும்பிய சமீர், வீட்டின் பிரதான கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோதுதான் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, விசாரணை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சமீருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மர்ம அழைப்பில் பேசிய நபர், "உடனடியாக 40 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், உன் மனைவியையும், குழந்தைகளையும் கொலை செய்துவிடுவோம்," என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் நிலைகுலைந்து போன சமீர், உடனடியாக போலீசாரிடம் விவரத்தைத் தெரிவித்தார். காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, சிசிடிவி காட்சிகளில் ஒரு நபர், சமீரின் வீட்டிலிருந்து ஒரு பையைத் தூக்கி எறியும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், குற்றவாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண்ணையும் போலீசார் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் அடுத்தகட்டத்தில்தான் போலீசார் ஒரு சதித்திட்டத்தைக் கண்டுபிடித்தனர். கொள்ளையர்கள், சமீரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, அவரது பைக்கில் யாருக்கும் தெரியாமல் ஒரு மொபைல் போனை சைலன்ட் மோடில் மறைத்து வைத்துள்ளனர். அந்த போனை ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து, அவர் வீட்டில் இல்லாத சரியான நேரத்தைப் பார்த்து தங்கள் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷ்ரேயாஸ் போர்கர் உட்பட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெல்டரோடி காவல் நிலையத்தில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் காட்டப்படும் ஆடம்பரம், எந்த மாதிரியான விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/nagpur-man-robbed-by-friend-over-fake-ai-whatsapp-status




